இந்தியா போன்ற பெரிய நாட்டில் கோரக்பூர் போன்ற பல சம்பவங்கள் இதற்கு முந்தைய காலகட்டங்களில் நடந்து உள்ளது என்றும் இது முதல் முறையாக நடக்கவில்லை, என்றும் பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் கடந்த 6 நாட்களில் பிறந்த குழந்தைகள் உள்பட சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் 63 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மேலும் 9 குழந்தைகள் உயிர் இழந்தன. இதனால் பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்தது.
குழந்தைகள் இறப்புக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்ததுதான் காரணம், இது படுகொலை சம்பவம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
எனினும் மூளை அழற்சி காரணமாகத்தான் குழந்தைகள் இறந்தன என்று மருத்துவ கல்லூரியின் முதல்வர் டாக்டர் ராஜீவ் மிஸ்ரா மறுத்தார். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. இப்பிரச்சனை குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, இந்தியா போன்ற பெரிய நாட்டில் இதுபோன்ற பல சம்பவங்கள் முந்தைய காலகட்டங்களில் நடந்து உள்ளது என்றும் இது முதல் முறையாக நடக்கவில்லை என்றும் கூறினார். அமித்ஷாவின் இந்தப் பேச்சு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.