ஜெ. மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்… டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்…

First Published Aug 14, 2017, 8:21 PM IST
Highlights
ttv dinakaran meeting in melur


ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  உத்தரவிட வேண்டும்  என அ.தி.மு.க அம்மா அணியின்  துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி அ,,தி.மு.க. அம்மா அணியின் தினகரன் தலைமையில் மதுரை அடுத்த மேலூரில் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் 14 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் 4 எம்.பி.க்களும் கலந்து கொண்டனர். தமிழக அமைச்சர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

விழாவில் பங்கேற்றுப் பேசிய டி.டி.வி. தினகரன் ,எம்.ஜி.ஆர். நேசித்த மண்ணில் அவரது நூற்றாண்டு விழா நடப்பது சிறப்பான ஒன்றாகும் என தெரிவித்தார்.

தற்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளராக உள்ள சசிகலா தலைமையில் கட்சியை வழி நடத்துவோம் என்றும். இப்போதும் நடத்திக்கொண்டு தான் இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த 3 எம்.எல்.ஏ.,க்கள் கடத்தி வைக்கப்பட்டுள்ளனர் என்றும், . ஒளித்துவைப்பவர்கள் ஒழிந்து போவார்கள் என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

அரசு ஏற்பாடு செய்திருந்த எம்.ஜி.ஆர் நுாற்றாண்டு விழாவில் இவ்வளவு எழுச்சி இருந்ததா? ஆனால் இந்த கூட்டத்தில் தொண்டர்கள் மிகுந்த எழுச்சியுடன் கலந்து கொண்டிருப்பது  தொண்டர்கள் எங்கள் பக்கத்தில் உள்ளனர் என்பதையே காட்டுகிறது என்று கூறினார்.

ஜெயலலிதா  மரணம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீதி விசாரணைக்கு  உத்தரவிட வேண்டும் என்றும்,  எங்களுக்கு மடியில் கனம் இல்லை அதனால் விசாரணைக்கு பயம் இல்லை என்றும் டி.டி.வி.தினகரன் பேசினார்.

 

 

click me!