சசிகலா இணைப்பு பற்றி முதல்வரிடம் அமித்ஷா எதையும் கூறவில்லை... அடித்து கூறும் அமைச்சர் ஜெயக்குமார்..!

By vinoth kumarFirst Published Mar 3, 2021, 4:48 PM IST
Highlights

தேமுதிக ஒரு மாநிலங்களவை சீட் கேட்பதாக அனுமானத்தின் அடிப்படையில் தகவல்கள் பரப்பப்படுகிறது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

தேமுதிக ஒரு மாநிலங்களவை சீட் கேட்பதாக அனுமானத்தின் அடிப்படையில் தகவல்கள் பரப்பப்படுகிறது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள், தொகுதி பங்கீடு குறித்து தீவிரமாக பேசி வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாஜக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்த இழுபறிக்கு முக்கிய காரணம் அதிமுக, அமமுக இணைப்பு என்றே கூறப்படுகிறது. 

ஆனால், அமமுகவை அதிமுகவுடன் இணைக்காவிட்டாலும் பரவாயில்லை அவர்களை கூட்டணியிலாவது இணைத்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்க வேண்டும். இதற்கு எடப்பாடியார் சற்றும் பிடிகொடுக்கவில்லையாம். அதனால் டெல்லி சென்ற அமித் ஷா தமிழக தலைவர்களிடம், அதிமுக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் அமமுக நிலைப்பாடு பற்றி கேளுங்கள். மார்ச் 5 வரை அவர்களுக்கு அவகாசம், அதன் பிறகே பாஜக என்ன முடிவு எடுக்கும் என்பது குறித்து தெரிவிக்கப்படும் என கண்டிப்புடன் அமித்ஷா கூறிவிட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில்,சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்;- சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு தாக்கல் கடைசி நாளான இன்று கூடிய கூட்டம் மூலம் கட்சி எழுச்சியாக உள்ளதை பார்க்கலாம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்த எழுச்சியை இப்போதும் பார்க்க முடியும். எம்ஜிஆர், ஜெயலலிதா அலை காரணமாக எதிர்க்கட்சிகள் காணாமல் போகும். அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். அதிமுக ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழக மக்களும், கட்சி தொண்டர்களும் செயல்படுகின்றனர்.

எங்களை யாரும் நிர்பந்தம் செய்ய முடியாது. எங்கள் கட்சி உள்விவகாரங்களில் பாஜக தலையிட்டது இல்லை. அமமுக, சசிகலாவையும் அதிமுகவில் இணைப்பதற்கான எந்த சாத்தியமும் இல்லை. இது தான் உறுதியான நிலை. எங்கள் தலைமையில் கூட்டணி என்பது எள்ளி நகையாடக்கூடியதாக உள்ளது. அதிமுக சிங்கங்கள் கூட்டம். அமமுக குள்ளநரிகள் கூட்டம். தினகரன் கருத்தை நகைச்சுவையாக மக்கள் பார்ப்பார்கள்.

அதிமுக உள் விவகாரங்களில் தலையிடாத கொள்கையை தான் பாஜக கடைபிடிக்கிறது. சசிகலா, தினகரனை சேர்ப்பது குறித்து யோசனையாக தெரிவித்திருக்கலாம். அதனை நாங்கள் நிராகரித்துவிட்டோம். சசிகலாவை இணைப்பது குறித்து முதல்வரிடம் அமித்ஷா எதையும் தெரிவிக்கவில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

click me!