இணையும் ஸ்டாலின் - அழகிரி? ’ஒரே இரத்தம் ஒதுங்கி போவது இல்லை..’ அழகிரி ஆதரவாளர்களின் 'அடடே' போஸ்டர் !

By Raghupati RFirst Published Jan 28, 2022, 7:18 AM IST
Highlights

“ஒரே ரத்தம் ஒதுங்கி போவதும் இல்லை, நீ ஆற்றிய பணி மறந்து போவதும் இல்லை அண்ணா” என்ற வாசகங்களோடு அழகிரி ஆதரவாளர்கள் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திமுகவில் மு.க.அழகிரி, தென் மண்டல அமைப்புச் செயலாளராகவும், மத்திய அமைச்சராகவும் செல்வாக்குமிக்க நபராகவும் இருந்து வந்தார். கடந்த திமுக ஆட்சியில் தென்மாவட்ட அமைச்சர்கள் அவரது கண் அசைவில் செயல்பட்டனர். அவர் கூறிய நபர்களே திமுகவில் இடைத்தேர்தல்களில், உள்ளாட்சித் தேர்தல், கூட்டுறவுத் தேர்தல், மக்களவைத் தேர்தலில் வேட்பாளராக்கப்பட்டனர். மாவட்டக் கட்சியிலும் அவரது ஆதரவாளர்களே முக்கியப் பதவிகளில் இருந்தனர். 

அதன்பிறகு திமுகவில் யார் அடுத்த தலைமை என்ற போட்டியில் ஸ்டாலினுக்கும், மு.க.அழகிரிக்கும் உரசல் ஏற்பட்டது. 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வியடைந்த பிறகு மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டார். பலர் அவரிடம் இருந்து ஸ்டாலின் பக்கம் சென்றனர்.

கட்சியை விட்டுத் தன்னை நீக்கியதால் ஸ்டாலின் மீது கடும் அதிருப்தியில் இருந்த மு.க.அழகிரி, சென்னைக்கு வரும்போதெல்லாம் ஸ்டாலினைப் பற்றி அடிக்கடி சர்ச்சையான கருத்துகளைக் கூறிச் செல்வார். முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் கட்சித் தலைமை பொறுப்பேற்றதற்கும் மு.க.அழகிரி எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், ஸ்டாலின் எதற்கும் பதில் கூறாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் சமீபகாலமாக ஸ்டாலினைப் பற்றி மு.க.அழகிரி எந்தக் கருத்தும் கூறாமல் இருந்து வந்தார். இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலிலும் அவர் திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் எதிராகவும் செயல்படாமல் மவுனமாக இருந்தார். திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற விழாவில் மு.க.அழகிரி மகனும், மகளும் கலந்து கொண்டனர். மு.க.அழகிரியும் ஸ்டாலினுக்கு, ‘என் தம்பி முதல்வராவதில் எனக்குப் பெருமை' என நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தார்.

மதுரை என்றாலே போஸ்டரில் ‘மாஸ்’ காட்டி ஒட்டுமொத்த தமிழகத்தையே கலக்கிவிடுவார்கள். மு.க அழகிரியின் பிறந்தநாள் வரும் ஜனவரி 30 வர இருப்பதால், இப்போதே ‘ஆட்டத்தை’ ஆரம்பித்து விட்டனர் அழகிரி ஆதரவாளர்கள். மதுரையில் அவரது ஆதரவாளர்கள் பல்வேறு வாசகங்களோடு சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.

அதில் முதல்வர் ஸ்டாலினும், மு. க. அழகிரியும் இணைந்து இருப்பது போல படங்களை ஒட்டி “ஒரே ரத்தம் ஒதுங்கி போவதும் இல்லை, நீ ஆற்றிய பணி மறந்து போவதும் இல்லை அண்ணா “ என்ற வாசங்களோடு சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். மேலும் அதில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தயாநிதி அழகிரி ஆகியோர் படங்களும் இடம்பெற்றுள்ளது. அண்ணன், தம்பியான முதலமைச்சர் மு. க. ஸ்டாலினும், அழகிரியும் இணைய வேண்டும் என அழகிரியின் ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!