திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் ஏ.கே.போஸ் போட்டியிடுவதாக, அதிமுக தலைமை இன்று அறிவித்துள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சீனிவேல், திடீரென மரணம் அடைந்தததால், அந்த தொகுதிக்கு தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகியது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சை, புதுவை நெல்லித்தோப்பு தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதை அடுத்து மேற்கண்ட 4 தொகுதிகளுக்கும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை இன்று அதிமுக கட்சி தலைமை வெளியிட்டது. இதில் ஐந்து முனை போட்டியில் ஏ.கே.போசுக்கு திருப்பரங்குன்றம் தொகுதியில் வாய்ப்புகிடைத்துள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதியில் மட்டும் தான் மிகப்பிரபலங்கள் மோதினர். ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்தியன், பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன், கிரம்மர் சுரேஷ், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பால்ய நண்பர் சுந்தர்ராஜன் , மறைந்த சீனிவேலின் குடும்பத்தில் உள்ள ஒருவர் என பல முனை போட்டியிருந்தும் கடைசியில் ஏ.கே போசுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஏ.கே. போஸ், 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அதிமுகவை ஆரம்பிக்கும்போது பொதுக்குழு உறுப்பினராக பணியாற்றியவர்.
முதலமைச்சர் ஜெயலலிதா, அதிமுக பொது செயலாளராக பொறுப்பேற்ற பிறகு மதுரை மாநகர் மாவட்ட கழக அவைத் தலைவராகவும், இணை செயலாளராகவும் ஏ.கே.போஸ் பணியாற்றி உள்ளார்.
2003 முதல் 2006 வரை மதுரை மாநகர் மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார். பின்னர், 2006 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தலில் நிறுத்தப்பட்டு வெற்றியும் பெற்றார்.
2011 மதுரை வடக்கு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ் .ராஜேந்திரனை 46,400 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
2011 ஜூன் மாதம் முதல் நவம்பவர் மாதம் வரை மீண்டும் மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக பணியாற்றிய போசுக்கு 2016 தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஆனால் விதி வலியது .
தேர்தலில் வென்ற சீனிவேல் பதவி ஏற்பு அன்று மரணமடைய ஐந்து முனை வாய்ப்பில் தற்போது போசுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட அதிமுக தலைமை போசுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.