நாளுக்குநாள் அதிமுக கூட்டணியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.. அதிரடி காட்டும் ஜி.கே வாசன்..

By Ezhilarasan BabuFirst Published Mar 19, 2021, 5:22 PM IST
Highlights

இப்போது இருக்கும் மத்திய மாநில அரசுகளை போல விவசாயிகளுக்கு யாரும் சிறப்பான திட்டங்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்க முடியாது என்று பேசினார்

நடப்பு மத்திய மாநில அரசுகளை விட வேறு எந்த ஆட்சியும் விவசாயிகளுக்கு சிறப்பான திட்டங்களை தந்திருக்க முடியாது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் பேசியுள்ளார்.சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது இதில் கல்வி, சுகாதாரம்,விவசாயம், வேலைவாய்ப்பு என அனைத்திலும்  முன்னிலை பெற்று தமிழகத்தை முதல் மாநிலமாக கொண்டு வர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி முயற்சிக்கும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது . மேலும் பூரண மதுவிலக்கு கொண்டுவர படிப்படியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும், தமிழக சட்டமன்றத்தில் திமுக சரியான முறையில் எதிர்கட்சியாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டினார். தமிழகத்தில் முதல் கட்சியாக அதிமுக கூட்டணி இருப்பதாகவும் திமுக எதிர்க்கட்சியாக செயல்படும் என்றும் கூறினார். மேலும் ஆக்கப்பூர்வமான பல திட்டங்களை அதிமுக கொண்டுவந்து செயல்படுத்தி வருவதாகவும் இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த வாக்குறுதியில் கொடுத்துள்ளதாகவும் அதனை அதிமுக செய்யும் என்றும் நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு நாளுக்குநாள் வெற்றி வாய்ப்பு அதிகரித்துக் கொண்டிருப்பதாகவும் ஜி .கே வாசன் தெரிவித்தார். 

விவசாயம் சார்ந்த அனைத்து மாவட்டத்திலும் விவசாயக் கல்லூரி ஏற்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பினை வாசித்து காட்டினார். அப்போது விவசாய சட்டங்கள் மீதான கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்த ஜி.கே.வாசன் இப்போது இருக்கும் மத்திய மாநில அரசுகளை போல விவசாயிகளுக்கு யாரும் சிறப்பான திட்டங்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்க முடியாது என்று பேசினார். இதனை தொடர்ந்து பாஜக ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் குஷ்பூ சுந்தர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில்  தலைவர் ஜிகே வாசனை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். 

 

click me!