பதவிகளைப் பெறுவதற்காகவே அதிமுகவின் இரு அணியினரும் முயல்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணிகள் இணைப்பு குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நாளை இறுதி முடிவு எட்டப்படும் என்று இரு அணியினரும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பதவிகளைப் பெறுவதற்காகவே அதிமுகவின் இரு அணியினரும் முயல்வதாக கூறினார்.
தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகளைக் கண்டித்து செப்டம்பர் 1 முதல் 10 வரை தமிழகம் முழுவதும் நடை பயணம் மேற்கொள்ள போவதாக அவர் தெரிவித்தார்.
மக்கள் விரோதப் போக்கை மத்திய - மாநில அரசுகள் தொடர்ந்து பின்பற்றி வருகின்றன என்றார். மேலும், தமிழகத்தில் பசு பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வரவே பாஜக தலைவர் அமித்ஷா வருகை தர உள்ளதாகவும் முத்தரசன் கூறியுள்ளார்.