சசிகலா சிறையில் உள்ளதால் அவரது ஒப்புதல் இன்றி ஜெயலலிதா இல்லத்தை சட்ட ரீதியாக நினைவிடமாக மாற்ற முடியாது என்றும், வேதா நிலையத்தை நினைவிடம் ஆக்கும் முன் ஜெயலலிதா வாரிசுகளிடம் அனுமதி கேட்டிருக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவெல் கூறியுள்ளார்.
சென்னையில், செய்தியாளர்களை எம்எல்ஏ வெற்றிவேல் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கு ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே காரணம். அவர் ஆதரவாளர்களை ஒதுக்கிவிட்டு தனக்கு மட்டும் பதவியைப் பெற்றுக் கொள்கிறார். பேரம் படிந்து விட்டதால் எடப்பாடி அணியுடன், தனது அணியை இணைக்க உள்ளார் ஓபிஎஸ்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தவர் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவுக்கு பல முறை, பல துரோகங்களை செய்தவர். லட்சுமிபுரம் கிராம மக்களுக்கு கிணற்றையே விட்டுக் கொடுக்காதவர்.
ஜெ. மரணம் குறித்து நீதி விசாரணைக்கு வரவேற்கிறோம். ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்காமல், பதவியில் இருக்கும் நீதிபதியை நியமிக்க வேண்டும்.
ஜெயலலிதா வீட்டில் அத்துமீறி அரசு அதிகாரிகள் நுழைந்தால் வழக்கு தொடருவேம். வேதா நிலையத்தை நினைவிடம் ஆக்கும் முன்பு, ஜெயலலிதா வாரிசுகளிடம் அனுமதி கேட்டிருக்க வேண்டும். இவர்கள் அம்மா ஆட்சி நடத்தவில்லை.
சசிகலா சிறையில் உள்ளதால் அவரது ஒப்புதல் இன்றி ஜெயலலிதா இல்லத்தை சட்ட ரீதியாக நினைவிடமாக மாற்ற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.