திமுக ஆட்சியின் அவலங்களை நான் சொல்லட்டுமா..? தேனியில் கொதித்த ஓ.பன்னீர்செல்வம் !!

By Raghupati RFirst Published Feb 6, 2022, 12:44 PM IST
Highlights

திமுக ஆட்சியின் அவலங்களை நான் பட்டியலிடட்டுமா ? என்று காட்டமாக தமிழக அரசை விமர்சித்து இருக்கிறார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார்.அதில், ‘அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் செயல்பட்டு கட்சி வெற்றிக்கு பாடுபட வேண்டும். 10 மாதங்களுக்கு முன் ஆட்சி பொறுப்புக்கு வந்த திமுக அரசு வெகு விரைவாக மக்களின் அதிருப்தியை பெற்றுள்ளது. 

திமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டாலும், நிர்வாக திறமையின்மையாலும் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். அதிமுக ஆட்சியின் போது ஏற்பட்ட இயற்கை இடர்பாடுகளாகிய மழை, வெள்ளம், கொரோனா காலங்களில் மக்களுக்கு பல்வேறு நிலைகளில் நாம் சிறப்பான பணியை ஆற்றி இருக்கின்றோம். கொரோனா காலத்தில் டெல்லியில் இருந்த தமிழகத்தை சேர்ந்த 900 இஸ்லாமியர்களை தமிழகத்திற்கு அழைத்து வர ஒரு ரெயிலையே ஏற்பாடு செய்து வரவழைத்தோம். மேலும், கொரோனா பாதித்தவர்களுக்கு ராஜ உபசாரத்துடன் கூடிய சிகிச்சையை அளித்தோம். 

அனைத்து அம்மா உணவங்களிலும் இலவச உணவு வழங்கப்பட்டது. அதே நேரத்தில் தற்போதைய கொரோனா காலத்தில் திமுகவினர் மக்களை நாடி எந்தவித சேவைகளையும் செய்யவில்லை. பொங்கல் பரிசின் தரம் குறித்து நாடே அறியும். அ.தி.மு.க. ஆட்சியில் என்ன செய்தோம். இப்போதைய தி.மு.க. ஆட்சியில் என்ன நடக்கிறது ? என்பதை நாம் பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து எடுத்து சொல்லி பொதுமக்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற வேண்டும்’ என்று பேசினார்.

click me!