தமிழக அரசின் சார்பில் அதிமுக., நிறுவுனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாக்கள் ஆங்காங்கே நடத்தப் பட்டு வருகின்றன. மாவட்டந் தோறும், அணிகள் இணைந்து அவருக்கு நூற்றாண்டு விழா எனும் பெயரில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.
இதற்காக, பல இடங்களில் உள்ளூர் அதிமுக., பிரமுகர்களில் இருந்து, அந்த அந்தத் தொகுதி அமைச்சர்கள் வர விளம்பர விவகாரம், கட் அவுட்கள் வைப்பது, பேனர்கள், போஸ்டர்கள் என பலவற்றிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது பொதுமக்கள் மத்தியில் முகத்தைச் சுளிக்க வைத்துள்ளது.
இந்த நிலையில்தான், கோவையில் இவர்கள் செய்த காரியத்தால், ஓர் உயிரே போய்விட்டது..!
கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்ட கட்-அவுட்டால், விபத்தில் சிக்கிய ரகு என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தமிழக மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கோவையில் அ.தி.மு.க வினர் நடத்தும் அரசு விழாவிற்காக அவினாசி சாலையை மறித்து
ப் போடப்பட்டுள்ள அலங்கார வளைவில் நீட்டிக் கொண்டிருந்த மரக்கட்டையில் இரவில் மோதி இளைஞர் ரகுவின் உயிர் பறிபோனது. இதை அடுத்து, அரசு அலட்சியத்தால் ஏற்படும் விபத்துக்கள் கிரிமினல் குற்றமாகப் பார்க்கப்பட வேண்டும்
என்னும் குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், அலங்கார வளைவு மோதி இளைஞர் பலியான விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக., சார்பில் வழக்கு தொடுக்கப் பட்டுள்ளது. இதனிடையே, இந்த நிகழ்வில் திமுக தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் விதத்தில், தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார் தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். அவர் தனது டிவிட்டர் பதிவில்,
“அரசு விழாவில் வரவேற்பு வளைவுகள் பதாகைகள்...ஸ்டாலின் கண்டனம்! தமிழகத்தில் கட்அவுட் கலாச்சாரம் ஆரம்பமே திமுக ஆட்சி வந்த பிறகு தான்! மறக்க முடியுமா?” என்று கேட்டிருந்தார்.
அரசுவிழாவில் வரவேற்பு வளைவுகள் பதாகைகள்...ஸ்டாலின் கண்டனம்!தமிழகத்தில் கட்அவுட் கலாச்சாரம் ஆரம்பமே திமுக ஆட்சி வந்தபிறகுதான்!மறக்கமுடியுமா?
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP)முன்னர் இது போன்ற கட்-அவுட்கள், பேனர்கள் வைப்பது போன்றவற்றை திமுக.,வினர்தான் பெரிதாகச் செய்து வந்தனர். ஆனால், பின்னாளில் இது ஒரு விளம்பர உத்தியாகத் தெரிந்துவிட்டதால், கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சிகளுமே பேனர் கலாசாரத்தைக் கடைபிடிக்கத் தொடங்கின. பாஜக.,வும் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழகத்துக்கு தேசியத் தலைவர்கள் வரும் போது, பேனர்களும் கட் அவுட்களும் கலகலக்கத்தான் செய்கின்றன. இவற்றால் பெருமளவில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களும், கார்களில் பயணிப்பவர்களும் சிந்தனை திசை திரும்பி, விபத்துக்கு உள்ளாகின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டால், நீதிமன்றம், இது போன்ற கட் அவுட்களுக்கு தடை விதித்தது. மேலும், உயிருடன் இருப்பவர்களின் கட் அவுட்களை வைப்பதற்கும் தடை கொடுடுத்தது. இதனால், அலங்கார வளைவுகளில் கவனம் செலுத்தி வருகின்றனர் அரசியல் கட்சியினர்.
அப்படித்தான் இந்த எம்.ஜி.ஆர். நிகழ்ச்சிக்கு அலங்கார வளைவுகளை வைக்கப் போக, இது போன்ற விபத்துகள் நேர்வதுடன், இப்போது உயிர்ப் பலியும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கட் அவுட்கள் அலங்கார வளைவுகளுக்கு பொதுவான எதிர்ப்பும், தடையும் வரவேண்டுமே அல்லாது, அவர் செய்தால் தவறு, இவர் செய்தால் தவறல்ல என்று சொல்லும் விதமாகவோ, அல்லது இதிலும் அரசியல் பார்த்து நிலைமையை அறியாமல் கருத்தை வெளிப்படுத்துவதோ எந்த அளவுக்கு விகாரமானதாகி விடும் என்பதற்கு, தமிழிசையின் டிவிட்டர் பதிவும், அதற்கு வந்துள்ள பின்னூட்டங்களும் உதாரணம்.