ஜெயலலிதாவின் சாபத்திற்கு ஆளான அதிமுக வேட்பாளர்... ஒட்டப்பிடாரத்தை உலுக்கி எடுக்கும் நிர்வாகி..!

By Thiraviaraj RMFirst Published Apr 25, 2019, 1:02 PM IST
Highlights

ஜான் ஏறினால் முழம் இறங்கும் கதையாக இருக்கிறது அதிமுகவின் நிலைமை. மக்களவை தேர்தல் வேட்பாளர் தேர்விலும் சரி, இடைத்தேர்தல் வேட்பாளருக்கு வாய்ப்பு கொடுப்பதிலும் நீண்ட பஞ்சாயத்தை சந்தித்தே அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்படிருக்கிறது அதிமுக. 
 

ஜான் ஏறினால் முழம் இறங்கும் கதையாக இருக்கிறது அதிமுகவின் நிலைமை. மக்களவை தேர்தல் வேட்பாளர் தேர்விலும் சரி, இடைத்தேர்தல் வேட்பாளருக்கு வாய்ப்பு கொடுப்பதிலும் நீண்ட பஞ்சாயத்தை சந்தித்தே அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்படிருக்கிறது அதிமுக. 

அமைச்சர்கள் எல்லாம் முதல்வராக நினைத்துக் கொண்டு தங்களது ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கிக் கொடுப்பதில் மும்மரம் காட்டுவதால் அதிமுகவுக்கு ஏற்பட்ட அவலம் இது. இப்போது 4 தொகுதி வேட்பாளரை அறிவித்த பிறகும் பரபர பஞ்சாயத்து அதிமுகவில் பற்றி எரிகிறது. 

திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி இடைத்தேர்தலில், திருப்பரங்குன்றம் தொகுதிக்கும், ஒட்டப்பிடாரம் தொகுதிக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் திக்குமுக்காட்டிப்போனது அதிமுக தலைமை. அமைச்சர்கள் சிலர் தனக்கு வேண்டியவர்களுக்கே சீட் கொடுக்க வேண்டும் என பிடிவாதம் பிடிக்க ஒரு வழியாக வேட்பாளர்களை நீண்ட இழுபறிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் தான் ஒட்டப்பிடாரம், சூலூர் வேட்பாளர்களை தேர்வு செய்ததற்கு எதிராக உட்கட்சியில் இருந்தே கருப்புக் கொடி காட்ட ஆரம்பித்துள்ளனர் அக்கட்சி நிர்வாகிகள்.  

ஒட்டப்பிடாரத்தில் வேட்பாளராக மோகன் அறிவிக்கப்பட்டார். ஆனால் அமைச்சர் கடம்பூர் ராஜூஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அதிமுக பாசறை தலைவர் ஜெயலலிதாவுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என தலைமையை நச்சரித்து வந்தார். அமைச்சரின் ஆசி இருப்பதால் எப்படியும் தமக்கே சீட் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த ஜெயலலிதா, மோகனுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டதால் எரிமலையாய் வெடித்துக் கிளம்பி இருக்கிறார். 

செய்தியாளர்களை சந்தித்து தனது உள்ளக் குமுறல்களை கொட்டித் தீர்த்து விட்டார்.  ‘ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கு 28 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளோம். இதில் தலைமைக் கழகம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் மோகனைத் தவிர வேறு யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்து வேட்பாளராக அறிவித்தால் நாங்கள் மகிழ்ச்சியுடன் களப்பணியாற்றுவோம். தற்பொழுது தலைமை கழகத்திலிருந்து ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோகன் சுயநலம் மிக்கவர். 

அவர் மட்டும் தான் எல்லாமுமாக இருக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர். இதுமட்டுமில்லாமல் வேட்புமனு பரிசீலனையின் போது எனது பெயர் தான் வேட்பாளர் பட்டியலில் கடைசி வரையில் இடம் பெற்றிருந்தது. இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்னர் நேர்முகத் தேர்வுக்காக என்னைத் தலைமை கழகத்தினர் அழைத்திருந்தனர். அதன்பேரில் இங்கிருந்து நான் சென்னை செல்லும் இடைப்பட்ட நேரத்தில் பணம் கொடுத்து தன்னை வேட்பாளராக பட்டியலில் இணைத்துக் கொண்டார் மோகன். வேட்பாளர் பட்டியல் பரிசீலனையில் இருந்த எனது பெயரை அவர்கள் நீக்கிவிட்டனர்.

எனவே அதிமுக தலைமை கழகம் ஓட்டபிடாரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளரான மோகனை மாற்றுவதற்குப் பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்’ என வெளிப்படையாக தெரிவித்து விட்டார். அவரை சமாதானம் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. 

அதேபோல் சூலூர் தொகுதியில் போட்டியிட மறைந்த எம்.எல்.ஏ., கனகராஜ் மனைவி ரத்தினம், முன்னாள் அமைச்சர்கள் செ.ம.வேலுசாமி, ப.வெ.தாமோதரன், மாதப்பூர் பாலு ஆகியோர் தங்களுக்கே சீட் எனக் காத்திருந்தனர். ஆனால் கனகராஜின் சகோதரர் மகனான  வி.பி.கந்தசாமி அறிவிக்கப்பட்டார்.  இதனால் அதிருப்தி அடைந்த மற்றவர்கள் , எங்களைத் தாண்டி எப்படி கந்தசாமி வெற்றிபெறுகிறார் என்பதை பார்த்து விடுவோம் எனக் கிளம்பி இருக்கிறார்கள். அவர்களை சமாதானப்படுத்த வி.பி.கந்தசாமி பேச்சுவார்த்தை படலத்தை தொடங்கி இருக்கிறார். ஆனால், திருப்பரங்குன்றம் தொகுதியில் தான் பஞ்சாயத்து வெடிகுண்டாய் வெடிக்கும் எனக் கருதப்பட்ட நிலையில் அங்கு கப்சிப் ஆகி இருக்கிறார்கள் கட்சி நிர்வாகிகள். 

ஆனால், அங்கு பட்டாசு நமுத்துப் போனதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது விரைவில் வெடிகுண்டாய் வெடித்துக் கிளம்பும். அதை எப்படி சமாளிக்கப்போகிறார்களோ என்கிறார்கள் தி.கு தொகுதி உடன்பிறப்புகள்.
 

click me!