கூட்டணியை முடிவு செய்த அதிமுக... லெஃப்டில் சிக்னல் காட்டி ரைட்டில் திரும்பிய பாமக..!

By Thiraviaraj RMFirst Published Feb 16, 2021, 12:03 PM IST
Highlights

 இந்தத் தேர்தலில் திமுக வெல்ல ஒரு சிறு வாய்ப்பைக் கூட உருவாக்கக்கூடாது என்பதால்  பாமக கோரிக்கைகளில் சிலவற்றை ஏற்பது தான் சரியாக இருக்கும் என்று அந்த கட்சி முடிவுக்கு வந்துள்ளது.

திமுகவில் கூட்டணிக் கட்சி குழப்பங்கள் நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாய் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கும் நிலையில் அதிமுக-பா.ம.க.கூட்டணியை உறுதி செய்து தனது சாணக்கியத்தனத்தை மீண்டும் நிரூபித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி. இச்செய்தியால் அதிமுக வட்டாரம் ‘ஸ்வீட் எடு கொண்டாடு’என்று மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்க, திமுக வட்டாரம் திகைப்பில் ஆழ்ந்துபோயிருக்கிறது.

தனித்து போட்டியிட்டால் கடந்த முறையை போல் இந்த முறையும் வாக்குகளை மட்டுமே பிரிக்க முடியும் என்பதை புரிந்து கொண்டது ஒருபுறமிருக்க தங்களது பிடிவாதத்தை அலட்சியப்படுத்தாமல் தொடர்ந்து அமைச்சர்களை அனுப்பி தங்களை மதித்த ஈபிஎஸின் போக்கை டாக்டர் ராமதாஸ் மிகவும் மெச்சியுள்ளார்.

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி ராமதாஸ் கடந்த மூன்று மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறார். இதனால் பாமக – அதிமுக கூட்டணி நீடிக்குமா என்கிற சந்தேகம் வந்தது. வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கவில்லை என்றால் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்கிற ரீதியில் ராமதாஸ் அறிவித்தார். இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் அதிமுக – பாமக கூட்டணிப் பேச்சுவார்த்தை  புதனன்று காலை மீண்டும் தொடங்கியுள்ளது.

சென்னையில் உள்ள மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில், அமைச்சர்கள் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோருடன் பாமக தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீடு பேச்சுவார்த்தை இது என்று பாமக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் தனி இடஒதுக்கீடு பேச்சுவார்த்தையை ஏன் பாமக குழுவினர் அதிமுக நிர்வாகிகளுடன் நடத்த வேண்டும் என்கிற கேள்வி எழுந்தது. இதன் பின்னர் வெளியான தகவல்களின் படி, நடைபெற்றது கூட்டணி பேச்சுவார்த்தைதான் என்பது உறுதியாகியுள்ளது.

வன்னியர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு விவகாரத்தில் முதற்கட்டமாக சில வாக்குறுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுனர் ராமதாசிற்கு கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள். இது ஏற்றுக் கொள்ளும்படி இருந்த காரணத்தினால் தான் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு ராமதாஸ் இறங்கி வந்ததாக சொல்கிறார்கள். வரும் 14-ம் தேதி பிரதமர் மோடி சென்னை வர உள்ளார். அதற்குள் கூட்டணி தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. இதன்படியே பாமக குழுவினரை அழைத்து அதிமுக பேசியுள்ளது.  

இந்தப் பேச்சுவார்த்தையில் பாமகவிற்கு எத்தனை தொகுதிகள் என்பதில் முடிவு எட்டப்பட்டுவிட்டதாகவும் இனி கூட்டணியில் இழுபறி ஏற்பட எவ்வித வாய்ப்பும் இல்லை என்றே தகவலறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

இதன் அடுத்த கட்டமாக எந்தெந்த தொகுதிகள் என்பது தொடர்பாகவே பாமக தற்போது அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதிலும் ஓரிரு நாளில் முடிவு எட்டப்படும் என்று சொல்லப்படுகிறது.  இதனிடையே விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று சென்னை வந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. தற்போது தனது மகள் வீட்டில் ராமதாஸ் தங்கியிருப்பதற்கு காரணமே தனி இடஒதுக்கீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மிக முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் அப்போது ராமதாஸ் உடன் இருக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து கடந்த நாடாளுமன்ற தேர்தலை போலவே நட்சத்திர ஓட்டலில் பாமக –அதிமுக தலைவர்கள் சந்தித்து சட்டப்பேரவை தேர்தல் கூட்டணியை அறிவிப்பதோடு பாமகவிற்கான தொகுதி ஒதுக்கீட்டு விவரங்கள் அறிவிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

அதிமுகவை பொறுத்தவரை திமுகவின் தோல்வியை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல முடித்துவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. இந்தத் தேர்தலில் திமுக வெல்ல ஒரு சிறு வாய்ப்பைக் கூட உருவாக்கக்கூடாது என்பதால்  பாமக கோரிக்கைகளில் சிலவற்றை ஏற்பது தான் சரியாக இருக்கும் என்று அந்த கட்சி முடிவுக்கு வந்துள்ளது. இதே போக்கைத்தான் மற்ற கூட்டணிக் கட்சிகள் விவகாரத்திலும் கடைப்பிடிக்கவேண்டும் என்பதே ஈபிஎஸ்சின் திட்டமாக இருக்கிறது.

ஆக ஒரு வழியாக அ.தி.மு.க- பா.ம.க.வுக்கிடையேயான டீல் முடிந்தது என்பது தேர்தல் களத்தில் பரபரப்பான ட்விஸ்ட்தான். இப்படி தொடர்ந்து எடப்பாடியார் அடித்து அடித்து ஆடிக்கொண்டிருக்க, பாவப்பட்ட அண்ணாவிடம் பக்கோடா வாங்கக் கொடுத்த காசில் எட்டணா ஆட்டயப் போட்ட கதைகளைச் சொல்லி அசிங்கப்பட்டுக்கொண்டிருப்பதுதான் ஸ்டாலினின் சாதனை.

click me!