
18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் அதிமுக 8 இடங்களில் வெற்றி பெறாவிட்டால் மோடியல்ல அவரது டாடியே வந்தாலும் இந்த ஆட்சியை காப்பாற்ற முடியாது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதுவும் குறிப்பாக டிடிவி தினகரன், சீமான், கமல்ஹாசன் உள்ளிட்டவர்களும் அதிமுக - திமுக ஆட்சியை விமர்சித்து பேசி வருவது பிரச்சார களத்தில் அனல் பறக்கிறது.
இந்நிலையில் பொள்ளாச்சி தொகுதி அமமுக வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து அக்கட்சியின் துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடுமலை பேருந்துநிலையம் முன்பு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய டிடிவி தினகரன், பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை ஜெயலலிதா இருந்திருந்தால் இந்நேரம் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்திருப்பார். ஆனால் இப்போது இவ்வழக்கில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் தலையீடு உள்ளதால் காவல்துறையினர் மூடி மறைக்கப் பார்க்கின்றனர். தமிழகமே அதிர்ச்சியில் உறைந்த இந்த சம்பவத்தை பற்றி முதல்வர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று குற்றம்சாட்டினார்.
கடந்த 5 ஆண்டு காலம் நடைபெற்ற பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அதேபோல் மத்தியில் கூட்டணி அரசில் திமுக பங்கு வகித்த காலத்திலும் தமிழகத்துக்கு ஒரு பயனும் இல்லை. பாலியல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகு சிபிசிஐடி விசாரிக்க வேண்டிய அவசியமென்ன? என கேள்வி எழுப்பினார்.
கொங்குமண்டலத்தை சார்ந்தவர்கள் என கூறிக் கொண்டு உயர்மின் கோபுரம் அமைக்க முயற்சிக்கின்றனர். இதுகுறித்து அமைச்சர் தங்கமணியிடம் விவசாயிகள் கேட்டபோது மத்திய அரசின் திட்டம் எங்களால் ஒன்று செய்யமுடியாது என கூறுகிறார். ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் திறக்ககூடாது, நினைவிடத்தில் மணி மண்டபம் கட்டக்கூடாது என்றவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளனர். ஆட்சியில் அமர வைத்த ஜெயலலிதாவுக்கு செய்கிற துரோகம் ஆகும். தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே அடுத்த பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார்கள்’ என்றார்.