விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் அதிமுக அரசு செய்த சாதனைகளின் பட்டியல்..!

By karthikeyan VFirst Published Jan 30, 2021, 2:02 PM IST
Highlights

விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் அதிமுக அரசு செய்த சாதனைகளின் பட்டியலை பார்ப்போம்.
 

2011ம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் ஆட்சியிலிருக்கும் அதிமுக அரசு, பத்தாண்டில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பின் மேம்பாட்டிற்கு கொண்டுவந்த திட்டங்கள் மற்றும் செய்த சாதனைகளின் பட்டியலை பார்ப்போம்.

1) 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், கரூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. வேளாண் பகுதிகளான இந்த மாவட்டங்களில், விவசாயம் அல்லாத பிற தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதை தடுக்கும் விதமாக மக்களின் கோரிக்கையை ஏற்று, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல வளர்ச்சி சட்டத்தின் கீழ் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

2) 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 2020ம் ஆண்டு குருவை பருவத்தில் அதிக மகசூல் செய்யப்பட்டது.

3) கடந்த 2016ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார். ரூ.5,780 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்மூலம் 17 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர்.

4) 2019-2020ம் ஆண்டு, உச்சபட்சமாக 32.41 மெட்ரிக் டன் அரிசி அரசால் கொள்முதல் செய்யப்பட்டது. கிரேடு “ஏ” அரிசி ரூ.1958 மற்றும் சாதாரண அரிசி ரூ.1918க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.

5) 60 ஆண்டுகளுக்கு பிறகு 2016ம் ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, குடிமராமத்து பணிகளை மீண்டும் தொடங்கிவைத்தார். மழைநீரை சேமிக்கும் விதமாகவும், நீர்நிலைகளை மீட்கும் நோக்கிலும் தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டன. குடிமராமத்து திட்டத்தின் மூலம் 5,586 நீர்நிலைகள் புத்துயிர் பெற்றன.

6) அதிமுக மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கடும் முயற்சியின் விளைவாக 2018ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. இதன்மூலம் தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகளின் காவிரி நீர் உரிமை பாதுகாக்கப்பட்டது.

7) தமிழ்நாட்டில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் 40 சதவிகிதத்தினருக்காக, முதல்வர் பழனிசாமியின் அதிமுக அரசாங்கம், உணவு பதப்படுத்தும் கனவு திட்டத்தை 2018ம் ஆண்டு அமல்படுத்தியது. உணவு பொருட்கள் வீணாவதை தடுப்பது, விவசாயிகளின் வருவாயை அதிகப்படுத்துவது, விளைபொருட்களின் மதிப்பை கூட்டுவது மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவது ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு அமல்படுத்தப்பட்ட அந்த திட்டம் விவசாயிகளின் வளர்ச்சிக்கான கனவு திட்டம்.

8) தமிழ்நாட்டிற்கு 4 குளிர் சங்கிலி திட்டங்களுக்கு நிதியுதவி செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஒருங்கிணைந்த குளிர் சங்கிலி மற்றும் மதிப்புக் கூட்டல் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதம மந்திரி கிசான் சம்பதா திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

9) பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இலவசமாக பசு, ஆடு வழங்கும் திட்டம் 2011-2012ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த திட்டத்தின் கீழ் 1,11,444 பசுக்களும், 13,22,152 ஆடுகளும் இலவசமாக வழங்கப்பட்டன.

10) வேளாண் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை மக்களுக்கு அதிவேகமாகவும் தெளிவாகவும் தொழில்நுட்பத்தின் மூலமாக கொண்டு சேர்க்கும் நோக்கில் உழவன் மொபைல் அப்ளிகேஷனை முதல்வர் பழனிசாமி 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் விவசாயம் சார்ந்த திட்டங்கள், அறிவிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. விவசாய மானியத்திற்கான விண்ணப்பங்கள்-தகவல்கள், பயிர்க்காப்பீடு விவரங்கள், வானிலை முன்னறிவிப்பு உள்ளிட்ட 9 விதமான சேவைகளை அதன்மூலம் பெறமுடியும்.

11) விவசாயத்துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்திய உணவு மற்றும் வேளாண் சேம்பர், 2019ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு ”க்ளோபல் வேளாண் விருது” வழங்கி அங்கீகரித்து கௌரவப்படுத்தியது.
 

click me!