அதிமுக பொதுக்குழு செல்லும்.. ஓபிஎஸ் மனு தள்ளுபடி.. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

Published : Feb 23, 2023, 10:40 AM ISTUpdated : Feb 23, 2023, 10:46 AM IST
அதிமுக பொதுக்குழு செல்லும்.. ஓபிஎஸ் மனு தள்ளுபடி.. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

சுருக்கம்

கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்தக் கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர். 

கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் வெடித்தது. இதனையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்தக் கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர். 

இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கில் பொதுக்குழு செல்லாது என தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து, அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது

இதனை எதிர்த்து, ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வில் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்றது.

ஓபிஎஸ் தரப்பில் ஜூலை 11ம் தேதி அன்று நடத்தப்பட்ட அதிமுகபொதுக்குழு சட்ட ரீதியாக செல்லாது என வாதிடப்பட்டது. அதேபோல இபிஎஸ் தரப்பில், ஏற்கெனவே ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதும் அதிமுக கட்சி விதிகளில்  மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதும் பொதுக்குழு உறுப்பினர்கள் தான், அடிப்படை உறுப்பினர்கள் அல்ல. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை உருவாக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்றால் அதை ரத்து செய்யும் அதிகாரம் இருக்கிறது என வாதிடப்பட்டது. 

ஓபிஎஸ் தரப்பில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கிய பொதுக்குழுவே அவற்றை நீக்க முடியும் என்ற வாதம் தவறு. கட்சியின் உட்கட்சி பதவிகளுக்கானத் தேர்தலை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே அறிவித்தனர். கடந்த 2017-ம் ஆண்டில் அசாதாரண சூழலின்போது பொதுக்குழு கூடி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது. பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அவை தலைவருக்கு அதிகாரம் இல்லை என்பதை மறந்துவிட்டனர்' என வாதிடப்பட்டது. ஜனவரி 11-ம் தேதி இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து எழுத்துப்பூர்வ வாதங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில், கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். அதேபோல், ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

MK Stalin Net Worth: சொந்த கார் இல்லை.. தங்கம் இல்லை.. கையில் ரூ.10,000 மட்டுமே.. முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு!
Vijay Net Worth: விஜய்யிடம் இத்தனை கோடி சொத்துக்களா? வைரமும், தங்கமும், சொகுசு கார்களும்.. வேட்புமனுவில் தகவல்!