பாயிண்டை பிடித்த ஓபிஎஸ்.. வழக்கு இபிஸ்க்கு எதிராக மாறுகிறதா? ஐகோர்ட்டில் பரபரப்பு வாதம்..!

By vinoth kumarFirst Published Mar 22, 2023, 12:03 PM IST
Highlights

ஒருங்கிணைப்பாளரை நீக்கம் செய்ய கட்சியில் எந்த விதியும் இல்லை. பிற உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பின்பற்றும் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவில் தீர்மானங்கள் முன் வைக்கப்படாத நிலையில் இரட்டை தலைமை காலாவதியாகிவிட்டதாக எப்படி கூற முடியும்? என ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு வாதத்தை முன்வைத்து வருகிறது. 

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வழக்குடன் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய மனுக்களும் சேர்த்து விசாரிக்கப்படுகின்றன. முதலில் ஓபிஎஸ் தரப்பில் வாதிடுகையில்;- கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச்செயலாளர் பதவியை தேர்வு செய்ய முடியும். அந்த விதியை பொதுக்குழு உறுப்பினர்கள் திருத்த முடியாது. விதிகளை மீறி யாரும் போட்டியிடாதவாறு இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வந்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என வாதிடப்பட்டது. 

தற்போது பொதுக்குழு உறுப்பினர்களாக இருப்பவர்கள், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரால் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டவர்கள். ஜூன் 23 பொதுக்குழுவில் தீர்மானங்கள் முன் வைக்கப்படாத நிலையில் இரட்டை தலைமை காலாவதியாகிவிட்டதாக எப்படி கூற முடியும்? ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாக எந்த நீதிமன்றமும் அறிவிக்கவில்லை. தகுதி நீக்கம் செய்து விட்டு பதவிகள் காலாவதி ஆகிவிட்டதாக கூறுவதை எப்படி சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கில் உயர் நீதிமன்றமே முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேலும், பொதுக்குழுவில் எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இந்த சிறப்பு தீர்மானத்தின் மீது எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. 1977ம் ஆண்டு முதல் கட்சியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகவும், நிதி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட நேரங்களில் ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்காக முக்கிய பங்காற்றியுள்ளார்.

பெரும்பான்மை உள்ளதால் எந்த முடிவும் எடுக்க முடியும் எனக் கூறி முடிவெடுத்துள்ளனர். இந்த முடிவுகள் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் நோக்கத்துக்கு விரோதமானது. ஒருங்கிணைப்பாளரை நீக்கம் செய்ய கட்சியில் எந்த விதியும் இல்லை. பிற உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பின்பற்றும் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு  வாதத்தை முன்வைக்கப்பட்டது. 

click me!