எஸ்.பி வேலுமணி & கோவிற்கு 'ஆப்பு' வைத்த நீதிமன்றம் !! 110 கோடி சொத்துக்கள் முடக்கம்..என்ன நடந்தது ?

By Raghupati RFirst Published Feb 15, 2022, 12:57 PM IST
Highlights

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்பான வழக்கில் ரூ.110 கோடி நிரந்தர வைப்புதொகையை முடக்க லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். அதே போல், வேலுமணியின் கூட்டாளிகள் வீட்டிலும் அதிரடியாக சோதனை நடைபெற்றது. 

கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக வேலுமணி இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. 

அரசு ஒப்பந்தப் புள்ளி பணிகளை தருவதாகக் கூறி 1.25 கோடி ரூபாய் ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது பாதிக்கப்பட்ட ஒப்பந்ததாரர், கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையிலும் சோதனை நடைபெற்றது. குறிப்பாக வேலுமணி மற்றும் அவரது மூத்த சகோதரர் அன்பரசன், நெருங்கிய கூட்டாளிகள் சந்திரசேகர் மற்றும் சந்திரபிரகாஷ் மற்றும் இவர்கள் நடத்தி வந்த நிறுவனங்கள் மீது, மோசடி, கூட்டு சதி உட்பட, ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சென்னை மாநகராட்சியில் 464 கோடி ரூபாய், கோவை மாநகராட்சியில் 346 கோடி ரூபாய்க்கு டெண்டர் விட்டு, முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது. இது தொடர்பாகவும் வேலுமணி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கூட்டாளிகள் 2 பேருக்கு சொந்தமான 110 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. 

லஞ்ச ஒழிப்புத் துறை கோரிக்கையை ஏற்று 110 கோடி ரூபாய் நிரந்தர வைப்புத் தொகை முடக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. திமுக ஆட்சி அமைந்ததுக்கு பிறகு, தொடர்ந்து விசாரணை வளையத்துக்குள் எஸ்.பி வேலுமணி இருந்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க கூடிய இச்சூழலில் இந்த வழக்கு எஸ்.பி வேலுமணி தரப்புக்கு பெரிய அடியை கொடுத்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

click me!