சந்தை வரி விதித்த தமிழக அரசு...? உணவு பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு..! ஓபிஎஸ் எச்சரிக்கை

By Ajmal KhanFirst Published May 29, 2022, 10:38 AM IST
Highlights

தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை சட்டத்தின் முதல் அட்டவணையில் புதிதாக பல வேளாண் விளை பொருட்களை சேர்த்து அதன்மூலம் வணிகர்களை ஒரு விழுக்காடு சந்தை வரி (Market Cess) செலுத்த திமுக அரசு உத்தரவிட்டதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

விளை பொருள்களுக்கும் ஒரு விழுக்காடு சந்தை வரி விதிக்கப்பட்டு இருப்பதால் விலை உயர்ந்து பொதுமக்கள் பாதிக்கப்பட கூடிய சூழல் உருவாகியுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விளைந்த விளை பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்து விவசாயிகள் பயன்பெறுவதற்குரிய விற்பனைத் தளத்தினை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் பணிகள் தமிழ்நாட்டில் உள்ள 27 விற்பனை குழுக்களின் கீழ் 284 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.தற்போதுள்ள நடைமுறைப்படி, நெல், மக்காச் சோளம், புளி, பருத்தி உள்ளிட்ட சில பொருட்களுக்கான மறைமுக ஏலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடைபெறும் என்றும், இந்த ஏலத்தில் விருப்பமுள்ள விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது விளை பொருள்களை விற்பனை செய்து வந்ததாகவும், அந்தப் பொருட்களை வியாபாரிகள் கொள்முதல் செய்து வந்ததாகவும், இங்கு நடைபெறும் ஏலத்திற்கு ஒரு விழுக்காடு சந்தை வரி விதிக்கப்படும் என்றும், இது தவிர ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியேயும் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வந்தது என்றும், அதற்கு சந்தை வரி கிடையாது என்றும், சென்ற ஆண்டு இந்தப் பட்டியலிலிருந்து பருத்தி நீக்கப்பட்டு விட்டதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், தற்போதைய தி.மு.க. அரசு, புதிதாக பல க பொருட்களை 1987 ஆம் ஆண்டைய தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டத்தின் முதல் அட்டவணையில் சேர்த்து, அதனை 25-05-2022 நாளிட்ட அரசிதழ் எண் 21-ல் வெளியிட்டு இருப்பதாகவும், இந்த அறிவிக்கையினுடைய இணைப்பின்படி, எல்லா வடிவ தானியங்களான சோளம், கம்பு, ராகி, தினை, குதிரைவாலி, வரகு, சாமை; எல்லா வடிவ பயறு வகைகளான உளுந்து, பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, பட்டாணி, மொட்சை, காராமணி, கொள்ளு; எண்ணெய் வித்துக்கள், தேங்காய் நார் போன்ற நார்ப் பொருட்கள்; கிழங்கு வகைகள்; சுவையூட்டும் பொருட்கள் மற்றும் நறுமணப் பொருட்கள்; அனைத்து வகை கரும்பு வெல்லம், பனை வெல்லம், கச்சா இரப்பர், பூண்டு, மிளகாய் வத்தல் உள்ளிட்ட பல பொருட்களுக்கு ஒரு விழுக்காடு சந்தை வரி தற்போது விதிக்கப்பட்டுள்ளதாகவும், இது தவிர ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியே விற்பனை செய்யப்படும் விளை பொருள்களுக்கும் ஒரு விழுக்காடு சந்தை வரி விதிக்கப்பட்டு இருப்பதாகவும் வியாபாரிகளும், வணிகச் "சங்கங்களும் தெரிவித்துள்ளன.மேற்படி பொருட்களுக்கு ஒரு விழுக்காடு சந்தை வரிவிதிக்கப்பட்டிருப்பதன் மூலம் முதலில் பாதிக்கப்படுபவர்கள் பொருட்களை விற்பனை செய்யும் விவசாயிகளும், பொருட்களை வாங்கும் வியாபாரிகளும்தான் என்றும், இதன் காரணமாக பொருட்களின் விலை உயர்ந்து பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும், உளுந்து போன்ற பயறு வகைகள் வெளிநாட்டில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு தமிழகத்தில் உள்ள வியாபாரிகளால் வியாபாரம் செய்யப்படுகிறது என்றும், இதற்கும் வரி கட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும், 

ஒழுங்குமுறை விற்பனைக்  கூடங்களுக்கு வெளியே நடக்கும் வியாபாரத்திற்கு பிற மாநிலங்களில் சந்தை வரி விதிக்கப்படுவதில்லை என்றும், தமிழ்நாட்டில் இருந்து வெளியே செல்லும் அனைத்துப் பொருட்களுக்கும் சந்தை வரி கட்ட வேண்டும் என்று சொல்வது எவ்விதத்திலும் நியாயமில்லை என்றும், ஏற்கெனவே உள்ள பொருட்களுக்கு மட்டும் சந்தை வரி வசூலிக்கப்பட வேண்டும் என்றும், புதிதாக எந்தப் பொருளுக்கும் சந்தை வரி விதிக்கக்கூடாது என்றும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியே நடக்கும் வியாபாரத்திற்கு சந்தை வரி விதிக்கக்கூடாது என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அரசின் இதுபோன்ற நடவடிக்கை வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க வழி வகுக்காது. மாறாக குறைக்க வழிவகுக்கும். தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரையும் பாதிக்கும் செயலாகும். தி.மு.க. அரசின் வணிக விரோத கொள்கைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இதில் உடனடியாக தலையிட்டு, இந்தக் கோரிக்கையில் உள்ள நியாயத்தினைக் கருத்தில் கொண்டு,புதிதாக எந்த விளை பொருளையும் ஒரு விழுக்காடு சந்தை நுழைவு வரிக்கு உட்படுத்தாமல் இருக்கவும், பிற மாநிலங்களில் உள்ளது போன்று ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியே நடக்கும் வியாபாரத்திற்கு ஒரு விழுக்காடு சந்தை வரி விதிக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
 

click me!