ஸ்டாலின் அருகில் நிற்பதோ ஊழல் குற்றவாளி! போராட்டம் நடத்துவதோ ஊழலுக்கு எதிராக!

By vinoth kumarFirst Published Sep 19, 2018, 10:20 AM IST
Highlights

ஊழல் வழக்கில் தண்டனை பெற்று எம்.பி பதவியை பறிகொடுத்த செல்வகணபதியை அருகே வைத்துக் கொண்டு ஸ்டாலின் சேலத்தில் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தியது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

ஊழல் வழக்கில் தண்டனை பெற்று எம்.பி பதவியை பறிகொடுத்த செல்வகணபதியை அருகே வைத்துக் கொண்டு ஸ்டாலின் சேலத்தில் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தியது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. தி.மு.க தலைவராக ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக அந்த கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க அரசின் ஊழலுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. சேலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மேடையின் மேலே கொட்டை எழுத்துகளில் அ.தி.மு.க அரசின் ஊழலுக்கு எதிரான ஆர்பாட்டம் என்று எழுதப்பட்டிருந்தது.

 

ஆனால் ஸ்டாலின் மேடை ஏறியதும் அவருக்குவலதுபுறமாக நின்று கொண்டிருந்தார் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி. அவர் தற்போது தி.மு.கவின் தேர்தல் பிரிவு செயலாளராக உள்ளார். ஆனால் கடந்த 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தார். இவர் மீது கலர் டி.வி ஊழல், சுடுகாட்டு கொட்டகை ஊழல் என்று பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளன.

புகார்கள் இருந்தால் பரவாயில்லை, ஏன் நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி செல்வகணபதி என்பது தான் அதிர்ச்சிகரமான தகவல். கலர் டிவி ஊழல் வழக்கில் கடந்த 2000மாவது ஆண்டு செல்வகணபதி குற்றவாளி என்று கீழ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அடுத்த ஆண்டே அந்த வழக்கில் இருந்து உயர்நீதிமன்றம் செல்வகணபதியை விடுதலை செய்தது.

 

இதன் பிறகு அ.தி.மு.கவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட செல்வகணபதி கடந்த 2008ம் ஆண்டு தி.மு.கவில் இணைந்தார். வீரபாண்டி ஆறுமுகம் இருந்தவரை சென்னையில் இருந்து அரசியல் செய்து வந்த இவர் அவர் மறைவுக்கு பிறகு சேலத்திற்கு சென்று அங்கு அரசியல் செய்ய ஆரம்பித்தார். ஸ்டாலினுக்கு நெருக்கமான காரணத்தினால் தி.மு.க மாநிலங்களவை எம்.பியாக உயர்ந்தார். ஆனால் சுடுகாட்டு கொட்டகை ஊழல் வழக்கில் செல்வகணபதி குற்றவாளி என்று கடந்த 2014ம் ஆண்டு சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்டது.

 

இதனால் அவரது எம்.பி பதவி உடனடியாக பறிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் மட்டுமே தண்டனை என்பதால் செல்வகணபதி ஜாமீனில் தற்போது உள்ளார். வழக்கு மேல்முறையீட்டில் உள்ளது. தி.மு.க தலைவரான பின்னர் முதல் முறையாக ஒரு ஆர்பாட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அதிலும் அ.தி.மு.க அரசின் ஊழலுக்கு எதிரான போராட்டம் அது. அப்படி இருக்கையில் அந்த ஆர்பாட்டத்தில் மேடையில் தனக்கு அருகே ஊழல் வழக்கில் தண்டனை பெற்று எம்.பி பதவியை இழந்த செல்வகணபதியை நிறுத்தி வைத்திருந்தது தான் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

 

 போராட்டத்திற்கு வந்த தி.மு.கவினரே கூட ஊழலுக்கு எதிரான போராட்ட மேடையில் ஊழல்வாதியான செல்வகணபதியை தலைவர் ஏன் அனுமதித்தார் என்று தங்களுக்குள் முனுமுனுத்துக் கொண்டு சென்றரைத காண முடிந்தது. மேலும் ஊழல்வாதியை அருகே வைத்துக் கொண்டு ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் மக்கள் எப்படி ஏற்பார்கள் என்றும் அவர்கள் தங்களுக்குள் கேட்டுக் கொண்டனர்.

click me!