ஒருநாள் மழைக்கு மீண்டும் மிதக்குது சென்னை.! என்ன சாதித்தது இந்த விடியா அரசு.? எகிறும் எடப்பாடி.

By Ezhilarasan BabuFirst Published Dec 31, 2021, 6:00 PM IST
Highlights

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது சம்பந்தப்பட்ட அமைச்சரை பதவி விலக சொன்ன இன்றைய முதலமைச்சர், தற்போது இந்த விடிய அரசின் மின்சாரத்துறை அமைச்சரை இராஜினாமா செய்ய சொல்லுவாரா?

ஒருநாள் மழைக்கே மீண்டும் சென்னை மாநகராட்சி வெள்ளத்தில் மிதக்கிறது, இந்த 8 மாத காலத்தில் இந்த விடியா அரசு என்ன செய்தது? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- ஒவ்வொரு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பும் அதிமுக அரசு முன்னெச்சரிக்கையாக சென்னை மாநகரத்திற்கு தனியாகவும், மாவட்ட அளவில் ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மின்சாரவாரியம் உட்பட அனைத்து முக்கியமான துறைகளில் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் ஒருங்கிணைத்து. அப்போது முதலமைச்சராக மக்கள் பணியாற்றிய எனது தலைமையில் மூத்த அமைச்சர்கள் மற்றும் துறை அமைச்சர்களுடன். ஆகஸ்ட் மாதத்திலேயே  குறைந்தது 5 ஆய்வுக் கூட்டங்களை யாவது நடத்துவோம்.

தொடர்ந்து சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தங்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்துவார்கள். இதுதவிர தலைமைச் செயலாளர் பருவமழை தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்வார்.இந்த விடியா அரசு மே மாதமே ஆட்சி பொறுப்பு ஏற்றும் வடகிழக்கு பருவமழை குறித்த ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சரியான அறிவுரைகள் வழங்கப்படவில்லை என்றும்  முக்கியமாக சென்னையில் பணிபுரிந்து அதிகாரிகளையும் முழுவதுமாக பணியிடமாறுதல் செய்ததன் விளைவாக ஏற்பட்ட நிர்வாக  குளறுபடிகளை எனது முந்தைய அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தேன். நேற்று ஒரு நாள் பிற்பகல் முதல் பெய்த கன மழையால் சென்னையில் மட்டும் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியாகியுள்ளனர். ஓட்டேரியில் வசித்துவந்த திருமதி தமிழரசி (70) புளியந்தோப்பை சேர்ந்த திருமதி மீனா (40) மயிலாப்பூரைச் சேர்ந்த லட்சுமணன் (13) ஆகியோர் தேங்கிய மழை நீரில் கால் வைத்ததும், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

மின்சார வாரியத்தின் மெத்தன போக்கால் உயிரிழந்த அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறேன். வடகிழக்கு பருவமழை 20 நாட்களுக்கு முன்பு சிறிதளவு ஓய்ந்திருந்தது, அப்போதாவது பழுதடைந்த மின் உபகரணங்கள், சாலைகள் மற்றும் வடிகால்களை சீரமைத்து இருந்தால் இந்த பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம். ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கும் யோசனைகளை இந்த எட்டு மாதங்களில் செயல்படுத்தி இருந்தால் கூட இந்த மூன்று உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம். மக்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளையும் தவிர்த்திருக்கலாம். மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால், அப்பகுதியில் உள்ள மின் வடங்களில் மின் கசிவு ஏற்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது சம்பந்தப்பட்ட அமைச்சரை பதவி விலக சொன்ன இன்றைய முதலமைச்சர், தற்போது இந்த விடிய அரசின் மின்சாரத்துறை அமைச்சரை இராஜினாமா செய்ய சொல்லுவாரா? மேலும் சென்னையில் நேற்று ஒரு நாள் பெய்த கன மழையால் சாலைகளில் ஏற்கனவே எங்கெல்லாம் மழை நீர் தேங்கியதோ அந்த இடங்களிலேயே நேற்றும் தேங்கியது. சென்னையில் பொதுமக்கள் நேற்று வீடு திரும்ப பெரும் அவதிக்குள்ளானார்கள் என்று அனைத்து ஊடகங்களும் நாளிதழ்களும் படத்துடன் தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளன. இந்த அரசின் முதலமைச்சர் பாதிக்கப்பட்ட இடங்களை அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் பார்வையிடுகிறார், ஊடகங்களுக்கு போஸ் கொடுக்கிறார், முந்தைய அரசின் மீது பழி போடுகிறார், அதோடு அவரது பொறுப்பு முடிந்துவிடுகிறது. அடுத்தநாள் அவர் பார்வையிட்டு ஆய்வு  செய்த இடங்களை நேரில் சென்று பார்த்தால் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு துறை அமைச்சர்கள் யாரும் நேரில் வந்து பார்வையிடவில்லை என்றும், முதலமைச்சர் பார் விட்டுச் சென்றவுடன் நிவாரண உதவிகள் வழங்கப்படுவதும் நிறுத்தப்பட்டு விடுகிறது என்றும்,  முக்கியமாக சென்னையில் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வருவதே இல்லை என்றும், அனைத்து ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பேட்டி அளித்துள்ளதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். தற்போதைய ஆட்சி நீட்டுக்காக ஒரு கமிட்டி, வெள்ளச் சேதங்களால் பாதிப்படையாமல் இருக்க ஆய்வு செய்து அறிக்கை வழங்க ஒரு குழு, நிதி மேலாண்மைக்கு ஒரு குழு என்று குழுக்கள் அமைப்பதை பார்க்கும்போது, இன்றைய அரசு தனது முன்னாள் தலைவர் எப்படி விசாரணை ஆணையங்களை அமைத்து பிரச்சினைகளை திசை திருப்பினாரோ அதுபோல் இந்த அரசும் குழுக்களை அமைத்து பிரச்சினைகளை திசை திருப்புகிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது. இனியாவது தங்களது இயலாமையால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு எதிர்க்கட்சிகளை குறை கூறாமல், மக்கள் நலப்பணிகளில் உண்மையான அக்கறையுடன் ஈடுபட வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன். என அதில் கூறப்பட்டுள்ளது.
 

click me!