தார்மீக நம்பிக்கையை இழந்த தமிழக அரசு... கண்டுகொள்ளாத சீனியர் அமைச்சர்களால் திணறும் விஜயபாஸ்கர்...

First Published May 16, 2017, 7:51 PM IST
Highlights
ADMK senior ministers Didnt supports Transport minister MR Vijayabaskar


அவமானம், வெட்கம், ஏமாற்றம் என்று எதை வேண்டுமானாலும் சொல்லி தலையிலடித்துக் கொள்ளுங்கள்! ஆனால் தலைகுனிவு நம் தமிழக அரசுக்குதான். வெகுஜன மத்தியில் ஒட்டுமொத்தமாக தார்மீக நம்பிக்கையை இழந்து நிற்கிறது இந்த அரசு...இப்படித்தான் சுளீர் வார்த்தைகளில் தமிழக அரசாங்கத்தை தாளித்து எடுக்கிறார்கள் பொதுநல போராளிகள். 
மே 15_ம் தேதி அரசு பேருந்து ஸ்டிரைக் துவக்கப்படும் என்று பூச்சாண்டி காட்டிவிட்டு 14_ம் தேதி மாலையே பஸ்ஸைவிட்டு இறங்கிவிட்டனர் டிரைவர்கள்.

வீடுகாடு செல்ல வழியில்லாமல் தவித்து அலறிய மக்களை தேற்றுவார் இல்லை. ஸ்டிரைக் புலி வருது, ஸ்டிரைக் புலி வருது...என்று வாரக்கணக்கில் போக்குவரத்து சங்கங்கள் மிரட்டிய நிலையில் கடைசி நொடி வரை ‘பயங்காட்டுவாங்க ஆனா பண்ணமாட்டாங்க.’ என்று ஏதோ ஒரு அலட்சிய நம்பிக்கையில் இருந்துவிட்டார் ஆளும் அனுபவமில்லாத அமைச்சர் விஜயபாஸ்கர். சீனியர்களோ அவர் சிக்கட்டும் என்று திட்டமிட்டு தள்ளிநின்று வேடிக்கை பார்த்தனர்.

காரணம், துறை சார்ந்த உள் அரசியல் மோதல்கள். இந்த ஸ்டிரைக்கை இவ்வளவு வலுவாக தூண்டி விடுவதே தன் உட்கட்சி பங்காளிதான் ஒருவர்தான் என்று விஜயபாஸ்கர் தன் நெருங்கியவட்டாரத்தில் புலம்புவது உண்மைதான். கடந்த ஆட்சியில் ஏக செல்வாக்காக வலம் வந்து தற்போது டம்மியாகி கிடக்கும் அந்த நபர், விஜயபாஸ்கர் அமைச்சராக வலம் வருவதை தாங்கிக் கொள்ள முடியாமல் தொடர்ந்து கொடுக்கும் டார்ச்சர்களில் உச்சபட்சம் இந்த ஸ்டிரைக் தூண்டுதல் என்று அமைச்சரின் வட்டாரம் கடுகடுப்பாகிறது.

இவர்களுக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். அது வேறு கதை. ஆனால் மக்கள் பாடாய்ப்பட்டு பஸ்பமாகிறார்களே அதை யார் சரி செய்வது? ஒரு வேளை ஸ்டிரைக் ஆரம்பமானால் மாற்று நபர்களை வைத்து எப்படி நிலையை சமாளிப்பது என்று அதிகாரிகளுடன் இணைந்து அமைச்சர் ஆலோசித்து அதை தயார் செய்திருக்க வேண்டும். பணம் தின்னி தனியார் பேருந்துகளை களத்தில் இறக்க வேண்டிய நிலை வந்தால் ‘கட்டண கொள்ளையில்’ அவர்கள் குதிக்காமல் தடுக்க வேண்டும் என்று முதலிலேயே கடுமாயான எச்சரிக்கை உத்தரவை அவர்களுக்கு போட்டிருக்க வேண்டும்.

ஓய்வு பெற்ற, வயது முதிர்ந்த மாஜி டிரைவர்களை நம்புவதை விடுத்து, வேலைவாய்ப்பு துறையில் பதிந்துவிட்டு காத்திருக்கின்ற இளம், பயிற்சி பெற்ற ஓட்டுநர்களை மாற்றுப் படையாக இறக்கியிருக்க வேண்டும். இவர்களை நெறிப்படுத்த வேண்டுமானால் ஓய்வு பெற்ற பணியாளர்களை இறக்கியிருக்கலாம். இன்னும் எவ்வளவோ ஆக்கப்பூர்வமகா செய்திருக்கலாம் ஸ்டிரைக் துவங்கும் முன்.

ஆனால் இவை எதையும் செய்யாத விஜயபாஸ்கர், கடைசி நொடி வரை ‘பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கிறது. ஸ்டிரைக் வராது. வந்தால் சமாளிப்போம்.’ என்றே பேசி வந்தார். ஸ்டிரைக்கும் வந்துவிட்டது. அதன் பிறகும் நிலைமையின் தீவிரத்தை உணராமல் ‘நிலைமை இயல்பாக இருக்கிறது. மக்களுக்கு தேவையான அளவு பேருந்துகளை இயக்குகிறோம்.’ என்று கனவிலேயே பேசி வருகிறார்.

ஆனால் யதார்த்தம் என்ன? சொற்ப அரசு பேருந்துகளை தவிர மொத்த போக்குவரத்து துறையும் தனியார் கையில் இருக்கிறது. அவர்கள் வைத்ததுதான் வரிசை என்று வாட்டி எடுக்கின்றனர் மக்களை. சிட்டிகள் மற்றும் டவுனுக்குள் நான்கு ரூபாய் டிக்கெட்டை பதினாறு ரூபாய்க்கு விற்கிறார்கள்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தீப்பெட்டி தொழிற்சாலை கூலிகள் அதிகம். உயிரை பணயம் வைத்து உழைக்கும் இவர்களின் வருவாயோ வெகு சொற்பம். தினமும் வேலைக்கு போக அரசு பேருந்தை நம்பி நிற்கும் இவர்கள் இரு மடங்கு, மும்மடங்காக உயர்ந்த தனியார் பேருந்து கட்டணத்தை கண்டு அலறுகிறார்கள்.

திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மலைக்காடுகளில் உள்ள குடியிருப்புகளுக்கு அரசு பேருந்து வசதியின்மையால் ஆஸ்பிடல் முதற்கொண்டு பல இடங்களுக்கு போக முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். ட்ரிப் அடிக்க வரும் டெம்போக்கள் நாலு கிலோமீட்டருக்கு அறுபது, எழுபது என கட்டணம் போட்டு தாளிக்கிறார்கள். 

பண போதை உச்சத்துக்கு ஏறி தறிகெட்டு ஆடும் தனியார் பேருந்துகளை அரசு அதிகாரிகள் யாரும் தட்டிக் கேட்பதில்லை. இதன் பின்னணி என்னவாக இருக்கும் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. ஆளுங்கட்சியின் அமைச்சர், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் கார்களில் வலம் வந்து ஊரை சுற்றிப் பார்க்கின்றனர். இவர்களுக்கு மக்கள் படும் அவஸ்தையில் ஒரு துளி கூட புரியவுமில்லை, அதை உணர்வதுமில்லை. 

உண்மையான அக்கறை இருந்தால் தலையில் துண்டை கட்டிக் கொண்டு தனி ஆளாக ஒரு தனியார் பேருந்தில் ஏறி அமைச்சர்கள் டிக்கெட் எடுத்துப் பார்க்கட்டும். அப்போது புரியும் நடக்கும் ஊழல். ஆனால் இதற்கெல்லாம் நேரமோ, அக்கறையோ இல்லாமல் ஏஸி காரில் வலம் வரும் அமைச்சர்களால், தவிக்கும் மக்களுக்கு எந்த தீர்வும் கிட்டப்போவதில்லை. 

குறித்த நேரத்துக்கு பேருந்து கிடைக்காமல், அப்படியே கிடைத்தாலும் மும்மடங்கு பணம் கொடுத்து போக வேண்டிய சூழலில் சிக்கி நொறுங்கும் மக்களின் வயிறு பற்றி எரிகிறது. இந்த அனலில் தமிழக அரசின் மீதான வாக்காளர்களின் ஒட்டுமொத்த தார்மீக நம்பிக்கையும் கருகி காணாமல் போவதுதான் யதார்த்தம். 

இந்த வினைக்கான விளைவை எதிர்வரும் காலங்களில் மிக மோசமாக அறுவடை செய்தே தீரும் அ.தி.மு.க. என்பதே பொது நல போராளிகளின் சாபம். 

click me!