திமுகவின் வெற்றிக் கோட்டை கனவு பலிக்குமா..? வேலூரை வசப்படுத்த அதிமுக வீசிய 3 அஸ்திரங்கள்!

By Asianet TamilFirst Published Jul 25, 2019, 10:38 AM IST
Highlights

வேலூர் தொகுதியைப் பொறுத்தவரை திமுக - அதிமுகவுக்கு சமமான செல்வாக்கு உள்ளது. இரு கட்சிகளுமே கடந்த காலங்களில் இங்கே வெற்றி பெற்றிருக்கின்றன. அதெல்லாம் ஜெயலலிதா காலத்தில் நடந்தவை. தற்போது அதே அளவுக்கு அதிமுகவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதைக் காட்ட வேண்டிய கட்டாயம் அதிமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. 

 நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிமுக, வேலூரில் வெற்றி பெறுவதற்காக  திமுகவுக்கு எதிராக 3 அஸ்திரங்களை ஏவியிருக்கிறது. அது அதிமுகவுக்கு பலன் தருமா?
 ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வென்றது. பணப் பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்ட வேலூரில் ஆகஸ்ட் 5 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. தங்களுக்கு செல்வாக்குக் குறையவில்லை என்பதைக் காட்ட, வேலூர் தேர்தலில் வெற்றி பெறுவதைக் கெளரவ பிரச்னையாக அதிமுக கருதுகிறது. மேலும் இடைத்தேர்தல் பாணியில் இத்தேர்தலை அதிமுக எதிர்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நாடாளுமன்ற தேர்தலில் திமுக அடைந்த வெற்றியைப்போல வேலூரிலும் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
வேலூர் தொகுதியைப் பொறுத்தவரை திமுக - அதிமுகவுக்கு சமமான செல்வாக்கு உள்ளது. இரு கட்சிகளுமே கடந்த காலங்களில் இங்கே வெற்றி பெற்றிருக்கின்றன. அதெல்லாம் ஜெயலலிதா காலத்தில் நடந்தவை. தற்போது அதே அளவுக்கு அதிமுகவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதைக் காட்ட வேண்டிய கட்டாயம் அதிமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. வேலூர் தொகுதியில் பெரும்பாலும் வெற்றி தோல்வியை முதலியார், வன்னியர், இஸ்லாமியர்களே நிர்ணயித்துவருகிறார்கள். இந்தச் சமூகங்களைச் சார்ந்த மக்களே இத்தொகுதியில் அதிகம் நிறைந்துள்ளனர்.


இந்த மக்களின் வாக்குகளைப் பெறும் வண்ணம் அண்மையில் பல்வேறு முயற்சிகளை அதிமுக எடுத்திருக்கிறது. இத்தொகுதியில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஏ.சி. சண்முகம் முதலியார் சமூகத்தைச் சார்ந்தவர். அந்தவகையில் முதலியார் சமூகத்தினர் வாக்குகள் கிடைக்கும் என்பது அதிமுகவின் நம்பிக்கை. மேலும் சட்டப்பேரவையில் அண்மையில் தமிழகத்தில் இடைக்கால முதல்வராக இருமுறை பதவி வகித்தவரும், நடமாடும் பல்கலைக்கழகம் என்று போற்றப்பட்டவரும், அண்ணாவால்,  ‘தம்பி வா, தலைமை ஏற்க வா..’ என்று அழைக்கப்பட்டவருமான நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்தார்.
  நெடுஞ்செழியனின் நுற்றாண்டு பிறந்த நாள் பற்றி துரைமுருகன் எழுப்பிய கேள்விக்குதான் பன்னீர்செல்வம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். முதலியார் சமூகத்தினரின் வாக்குகளைக் கவரம்விதமாக இந்த அறிவிப்பு வெளியிட்டப்பட்டதாகப் பார்க்கப்படுகிறது. இதேபோல சட்டப்பேரவையில் தியாகி ராமசாமி படையாச்சியார் திருஉருவப் படத் திறப்பு விழா நடைபெற்றது. வேலூரில் நிறைந்துள்ள வன்னியர் சமூகத்தினரின் வாக்குகளைக் கவரும் விதமாக படத்திறப்பு விழா நடைபெற்றது என்ற முணுமுணுப்பு அரசியல் அரங்கிலும் எதிரொலித்தது.


அதிமுக கூட்டணியில் பாமக இருந்தாலும், வன்னியர் அதிகமுள்ள பகுதிகளில் திமுகவே வெற்றிக் கொடியை பறக்கவிட்டது. இந்த பகுதிகளில் மீண்டும் செல்வாக்கை நிலை நிறுத்தும் முயற்சியாகவே ராமசாமி படையாச்சியார் படத் திறப்பு விழாவும் ஆளுங்கட்சியால்  நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. வேலூர் தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பிலும் இதற்கான ஏற்பாடுகளை ஆளுங்கட்சி செய்ததாகவும் கருதப்படுகிறது.
வேலூரில் இஸ்லாமியர்கள் அதிகம். சுமார் 3 லட்சம் இஸ்லாமிய வாக்குகள் இங்கே இருக்கின்றன. அதிமுக பாஜகவோடு கூட்டணி வைத்ததால், இஸ்லாமியர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்று கருதப்படுகிறது. அதன் வெளிப்பாடாகவே தேர்தல் பிரசாரத்தில் பாஜக நிர்வாகிகளை அழைக்க தயங்குவதாகவும் கூறப்படுகிறது. ஏ.சி. சண்முகம் மோடி பெயரை உச்சரித்துக்கொண்டிருந்தாலும், அதிமுகவினர் பெரிதாக மோடி பெயரைச் சொல்லி வாக்குகள் இங்கே சேகரிக்கவில்லை. இவை எல்லாமே இஸ்லாமியர்களின் வாக்குகளைக் கவருவதற்காக அதிமுக உத்திகளாகப் பார்க்கப்படுகின்றன.
வேலூரில் இஸ்லாமியர்களின் வாக்குகளைக் கவரும்விதமாக வேலூரைச் சேர்ந்த முகமது ஜானுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வேலூரில் உருது மொழி பேசும் இஸ்லாமியர்களே அதிகம். முகமது ஜானும் உருது பேசும் இஸ்லாமியர்தான். அதிமுகவில் மாநிலங்களவைப் பதவியைப் பிடிக்க பெருந்தலைகள் காத்திருந்த வேலையிலும் தேடிக் கண்டுபிடித்து முகமது ஜானுக்கு பதவி தர வேலூர் தேர்தலே முக்கிய காரணம்.
இப்படி வேலூரில் பிரதானமாக இருக்கும் முதலியார், வன்னியர், இஸ்லாமியர்களின் வாக்குகளைக் கவர மூன்றுவிதமான அஸ்திரங்களை அதிமுக ஏவியிருக்கிறது. அதிமுகவின் இந்த உத்திகள்  பலன் அளிக்குமா என்பது ஆகஸ்ட் 9 அன்று வேலூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது தெரிந்துவிடும்.      

click me!