ஆளுங்கட்சியில் உச்சக்கட்ட குழப்பம்! ஈரோட்டில் முந்தி செல்லும் கணேச மூர்த்தி!!

By Vishnu PriyaFirst Published Mar 30, 2019, 3:18 PM IST
Highlights

அலட்சிய அமைச்சர்கள், கூட்டணி குழப்பம், ஆளுங்கட்சிக்கு இம்சையை கொடுக்கும் ஈரோடு தொகுதி! : சைக்கிள் கேப்பில் கலக்கலாய் காரையே ஓட்டும் கணேசமூர்த்தி. 
 

அலட்சிய அமைச்சர்கள், கூட்டணி குழப்பம், ஆளுங்கட்சிக்கு இம்சையை கொடுக்கும் ஈரோடு தொகுதி! : சைக்கிள் கேப்பில் கலக்கலாய் காரையே ஓட்டும் கணேசமூர்த்தி. 

தேர்தல் அரசியலைப் பொறுத்த வரையில் சுயபலம் மட்டுமே பத்தாது, எதிராளியின் பலவீனத்தையும் நமக்கு சாதகமாக்க தெரிந்திருக்க வேண்டும். இதை செய்பவரே அரசியல் சாணக்கியனாகவும், தேர்ந்த தலைவராகவும் பார்க்கப்படுவார். இந்த காரியத்தை மிக துல்லியமாக செய்வதன் மூலம் ஈரோடு தொகுதியில் ஆளுங்கட்சி கூட்டணியை அலறவிட்டுக் கொண்டிருக்கிறது தி.மு.க. கூட்டணி.


 
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் கூட்டணி சார்பாக அ.தி.மு.க.வின் வெங்கு மணிமாறனும், தி.மு.க. கூட்டணி சார்பாக ம.தி.மு.க.வின் கணேசமூர்த்தியும் போட்டியிடுகிறார்கள். முதல் ரவுண்டு பிரசாரம் பீக்கை தொட்டிருக்கும் நிலையில்,  இரு முக்கிய வேட்பாளர்களையும் சீர் தூக்கிப் பார்த்த விமர்சகர்கள் கணேசமூர்த்தியின் பலமாக ம.தி.மு.க.வின் தியாக வரலாறு, வேட்பாளரின் பழைய போராட்ட மற்றும் சிறை அனுபவங்கள், அரசியலில் பதித்திருக்கும் அழுத்தமான தடம்! ஆகியவற்றை சொல்கிறார்கள். அதேவேளையில் எதிரணி வேட்பாளரான வெங்குவை பொறுத்தவரையில் புதிய முகம், ஊழல் மற்றும் அடாவடி பெயர் அற்ற நிலை ஆகியன பிளஸ். இவைதான் விமர்சகர்கள் வைக்கும் ரிசல்ட்.
 
ஆனால் அதையும் தாண்டி, எதிராளியின் மைனஸை தனக்கு பிளஸ் ஆக்கும் வேலையை தெளிவாக செய்கிறது தி.மு.க. கூட்டணி. அதாவது ஈரோடு நாடாளுமன்ற தொகுதியினுள்தான் காங்கயம் சட்டமன்ற தொகுதி வருகிறது. இதன் எம்.எல்.ஏ. அ.தி.மு.க.வின் கூட்டணியான கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு. இவர் இந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு! என்றும் பி.ஜே.பி.க்கு ஆதரவில்லை! என்றும் ரெட்டை நிலை எடுத்திருக்கிறார். ஒரே கூட்டணிக்குள் குழப்பமான ஒரு முடிவை எடுத்து மொத்தமாக கூட்டணியை அதிர்ச்சியுற வைத்துள்ளார்.

இதனால் தனியரசு மீது தணியாத எரிச்சல், கோபத்தில் இருக்கும் பி.ஜே.பி.யினர் டோட்டலாக ஈரோடு நாடாளுமன்றம் முழுக்கவே பெரியளவில் தங்களது ஈடுபாட்டை காட்டவில்லை. காரணம், ‘இப்படி எங்களை வெளிப்படையாக ஒதுக்கும் தனியரசுவை ஏன் அ.தி.மு.க. தலைமை கண்டிக்கவில்லை?’ என்பதுதான். 

தங்களின் வருத்தத்தை ஈரோடு நாடாளுமன்ற தொகுதிகளுக்குள் வரும் அமைச்சர்களான கருப்பணன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் வெளிப்படுத்திவிட்டனர். ஆனால் அவர்களோ அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து அலட்சியம் காட்டுகின்றனர். இதனால் ஆறு சட்டசபை தொகுதிகளிலும் பி.ஜே.பி கட்சி மற்றும் அதற்கு ஆதரவாக இயங்கும் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்டவை அ.தி.மு.க. வேட்பாளரை கிட்டத்தட்ட புறக்கணிக்கவே செய்கின்றனவாம்.


 
இதனால் ஈரோடு நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க.வின் அணி குழம்பிக் கிடக்கிறது. இதை மிக சரியாக  ஸ்மெல் செய்துவிட்ட தி.மு.க. கூட்டணி வேட்பாளரான கணேசமூர்த்தி...’ஆளும் அணிக்கு சறுக்கலான, குழப்பமான இடங்களில் நமது பொறுப்பாளர்களை அதிகம் அமைத்து கேன்வாஸ் செய்யுங்கள். நானும் அந்த இடங்களுக்கு எக்ஸ்ட்ரா ரவுண்டு வந்து பிரசாரம் செய்கிறேன். நம் பொறுப்பாளர்கள் மீண்டும் மீண்டும் அந்த ஆளுங்கட்சியின் வீக் பாயிண்டுகளுக்கு போய் மக்களை சந்தித்தும், அதிருப்தியிலிருக்கும் அ.தி.மு.க.  கூட்டணி கட்சியினரை சந்தித்தும் பேசுவதன் மூலம் நன்மை கிடைக்கும். மக்கள் நிச்சயம் நம்மை ஆதரிப்பார்கள், அதேவேளையில் அ.தி.மு.க.வின் அதிருப்தி கட்சிகள் அட்லீஸ்ட் அவர்களுக்கு வாக்களிக்காமல் புறக்கணிக்கவாவது செய்வார்கள். அவர்களின் இழப்பு, நமக்கு வாய்ப்புதானே!” என்றிருக்கிறார்.
 
இந்த ஸ்கெட்சை அப்படியே செயலபடுத்திக் கொண்டிருக்கின்றன தி.மு.க. கூட்டணி கட்சிகள். அந்த அடிப்படையில் பார்க்கும்போது இப்போது கணேசமூர்த்தியின் கார்தான் ஈரோடு ரேஸ் டிராக்கில் முந்திச் சென்று கொண்டிருக்கிறது. 
ஆனாலும் மைல்ஸ் டு கோ!

click me!