அதிமுக ஆட்சியில் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு… அமைச்சர் எ.வ.வேலு பகீர் குற்றச்சாட்டு!!

By Narendran SFirst Published Nov 27, 2021, 5:06 PM IST
Highlights

அதிமுக ஆட்சியின் போது வீடுகள் ஒதுக்குவதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தமிழ்நாடு பொதுப்புணித்துறை அமைச்சர் எ.வ.வேலு குற்றம்சாட்டியுள்ளார். 

அதிமுக ஆட்சியின் போது வீடுகள் ஒதுக்குவதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தமிழ்நாடு பொதுப்புணித்துறை அமைச்சர் எ.வ.வேலு குற்றம்சாட்டியுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பிச்சாண்டி, எம்பி சி.என் அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் திருவண்ணாமலை தொகுதிக்கு உட்பட்ட 615 பயனாளிகளுக்கு 8.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகனை பொதுப்புணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். மேலும், புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசுகையில், இந்திய அரசியல் அமைப்பு சட்டம் கடந்த 1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்கப்பட்டது.

எனவே, இந்திய அரசியல் அமைப்பு தின உறுதிமொழியை இன்றைக்கு ஏற்றிருக்கிறோம். ஒதுக்கீடுக்காக 1921 ஆம் ஆண்டு நீதிக் கட்சி காலத்தில் இருந்து போராடியிருக்கிறோம். தொடர்ந்து பெரியார் அதற்காக போராடினார். அவரது போராட்டத்துக்கு அரணாக இருந்த காமராஜர், இடஒதுக்கீட்டை வழங்கினார். அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்தனர். ஆனாலும், இடஒதுக்கீட்டை ஏற்று அரசியல் அமைப்பு சட்டத்தில் 1951ஆம் ஆண்டில் திருத்தத்தை அப்போதைய பிரதமர் நேரு கொண்டு வந்தார். எனவே, இடஒதுக்கீட்டுக்கு முதன்முதலில் முறையிட்டது தமிழ்நாடுதான். இட ஒதுக்கீடு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நாம் அனைவரும் இந்த நிலைக்கு உயர்ந்திருக்க முடியாது. நம்முடைய குழந்தைகள் அரசு பணிகளுக்கு வந்திருக்க முடியாது. இந்த வரலாறுகளை இன்றைய இளம் தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும் என்றார். அதேபோன்று கடந்த 2006-2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அதிக அளவில் பொதுமக்களுக்கு பட்டா வழங்கியதிலும், முதியோர் உதவித் தொகை வழங்கியதிலும் திருவண்ணாமலை மாவட்டம் இரண்டாம் இடம் பிடித்தது. மீண்டும் அதே போன்ற நிலையை நாம் அடைய வேண்டும். அதற்காக, அரசு அதிகாரிகள் முயற்சி எடுக்க வேண்டும். பட்டா வழங்கியதும், அதற்கான கணக்குகளை அரசு பதிவேட்டில் ஏற்ற வேண்டும். மேலும், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் 1 லட்சம் வீடுகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதற்கான உத்தரவுகளை பெற்றிருந்த பொதுமக்களுக்கு, ஆட்சி மாற்றத்தால் வீடுகள் கிடைக்கவில்லை. எனவே, அவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் மேலும், வீடு வழங்கும் திட்டத்தின் பயனாளிகளை கடந்த ஆட்சியில் ஆன்லைனின் பதிவேற்றி உள்ளனர். அதில் பல்வேறு முறைகேடுகள் நடத்திருக்கிறது. வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு தான் வீடுகள் வழங்க வேண்டும். ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் எந்த அடிப்படையையும் பின்பற்றவில்லை. குறிப்பாக திருவண்ணாமலை ஒன்றியத்தில் கடந்த ஆட்சியில் வீடுகள் ஒதுக்குவதில் முறைகேடுகள் நடந்திருக்கிறது. கொரோனா தடுப்பூசி செலுத்துவதில், மாநிலத்தின் சராசரி 77 சதவீதமாகும். ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் 80.8 சதவீதத்தை அடைந்திருக்கிறோம். நூறு சதவீத இலக்கை அடைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்தார். அப்போது அவருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், கூடுதன் ஆட்சியர் பிரதாப், மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

click me!