
திமுக, அதிமுகவின் கவுரவ பிரச்னையாக மாறிவிட்டது 3 தொகுதியின் இடைதேர்தல்.
வேட்பாளர்களை அறிவித்த கையோடு, தேர்தல் பொறுப்பாளர்களையும் அறிவித்து களத்தில் இறக்கிவிட்டுள்ளது பெரிய கட்சிகள்.
அதிலும் ஆளும் அதிமுகவின் அனைத்து அமைச்சர்களும் 3 தொகுதிகளுக்கும் சரி சமமாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதனால், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
அரவங்குறிச்சி தொகுதியை பொறுத்தவரை, இங்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக, அரவங்குறிச்சியை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
எடப்பாடி பழனிச்சாமியுடன், வேட்பாளர் செந்தில்பாலாஜி, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கதர் வாரிய அமைச்சர் பாஸ்கரன், உயர்க்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோருடன் ஏராளமான அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.
இதேபோன்று ஆட்சி வழி நடத்தும் பொறுப்பில் உள்ள நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில், திருப்பரங்குன்றம் 69வது வட்டத்துக்கு உட்பட்ட தொகுதிகளில் ஜீப்பில் சென்று வீடு வீடாக வாக்கு சேகரித்தனர். ஓ.பி,எஸ்ஸுடன் வேட்பாளர் ஏ.கே.போஸ், அமைச்சர் பெஞ்சமீன், ஆர்.டி.உதயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
தஞ்சாவூர் செட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுகளில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமியை ஆதரித்து, அமைச்சர்கள் வெள்ளமண்டி நடராஜன் வளர்மதி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று திமுகவினரும், களத்தில் இறங்கி வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டு வருவதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.