திராவிட மாடல் ஆட்சி தேவையில்லை.. இது தான் உங்கள் சாதனையா..? பதிலடி கொடுத்த ஓபிஎஸ்..

By Thanalakshmi VFirst Published May 20, 2022, 12:57 PM IST
Highlights

சென்னை குடிநீர்‌ வழங்கல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றல்‌ வாரிய தற்காலிக ஊழியர்களை நிரந்தரம்‌ செய்ய நடவடிக்கை எடுக்கும் வேண்டும் என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
 

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சென்னை குடிநீர்‌ வழங்கல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றும்‌ வாரியத்தில்‌ கிட்டத்தட்ட 2,000 தற்காலிக தொழிலாளர்கள்‌ பத்து ஆண்டுகளுக்கும்‌ மேலாக பணிபுரிந்து வருவதாகவும்‌, தற்காலிக பணியாளர்கள்‌ என்றாலும்‌ தங்களுக்கான சம்பளத்தை - சென்னை குடிநீர்‌ வழங்கல்‌ வாரியத்திடம்‌ இருந்துதான்‌ இதுநாள்‌ வரை பெற்று
வந்ததாகவும்‌, தற்போது மேற்படி பணிகளை ஒப்பந்த அடிப்படையில்‌ தனியார்‌ நிறுவனத்திற்கு தி.மு.க. அரசு தாரைவார்த்து விட்டதால்‌, பத்து ஆண்டுகள்‌, பதினைந்து ஆண்டுளாக பணிபுரிந்து வந்த தற்காலிகப்‌ பணியாளர்களை ஒப்பந்த ஊழியர்களாக தி.மு.க. அரசு மாற்றியுள்ளதாகவும்‌ செய்திகள்‌ வருகின்றன.

மேலும் படிக்க: 10 ஆம் வகுப்பு பாடத்தில் இருந்து பெரியார் பெயர் நீக்கம்.!ஆர்எஸ்எஸ் தலைவர் பெயர் சேர்ப்பு..? கொதித்தெழுந்த வைகோ

இதனை எதிர்த்து சென்னை குடிநீர்‌ வழங்கல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்று வாரியத்தில்‌ பணிபுரியும்‌ தற்காலிக ஊழியர்கள்‌ ஐந்தாவது நாளாக அறப்‌ போராட்டத்தில்‌ ஈடுபட்டு வருகின்றனர்‌. 'உயிரே போனாலும்‌ அறப்‌ போராட்டம்‌ தொடரும்‌” என்று
குடிநீர்‌ வாரிய ஊழியர்கள்‌ அறிவித்து இருக்கிறார்கள்‌. இந்த அறப்‌போராட்டத்திற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ தனது முழு ஆதரவினை அளிக்கும்‌ என்பதைத்‌ தெரிவித்துக்‌ கொள்வதோடு, வாரியத்தில்‌ பணிபுரிந்து வந்த தற்காலிக ஊழியர்களை ஒப்பந்த ஊழியர்களாக மாற்றிய தி.மு.க. அரசிற்கு கடும்‌ கண்டனத்தையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

இதுகுறித்து, குடிநீர்‌ வாரிய அதிகாரியிடம்‌ கேட்டதற்கு, வாரியத்தில்‌ இக்கட்டான சூழ்நிலை நிலவுவதாகவும்‌, பெரும்பாலான ஊழியர்கள்‌ போராட்டத்தில்‌ ஈடுபட்டு வருவதாகவும்‌ தெரிவித்து இருப்பதாக செய்திகள்‌ வருகின்றன. போராடும்‌ ஊழியர்கள்‌ மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும்‌, போராடும்‌ ஊழியர்களுக்குப்‌ பதிலாக
புதிய ஊழியர்களை வாரியம்‌ நியமித்து வருவதாகவும்‌, ஆனால்‌ அவர்களுக்கு இயந்திரங்களை இயக்குவதற்கான திறனும்‌, கழிவுநீர்‌ அடைப்பை நீக்குவதற்கான அனுபவமும்‌ இல்லை என்றும்‌, சென்ற மாத ஊதியம்‌ கூட அவர்களுக்கு
அளிக்கப்படவில்லை என்றும்‌ போராடும்‌ ஊழியர்கள்‌ தரப்பில்‌ தெரிவிக்கப்படுகிறது.

தி.மு.க. அரசின்‌ தேர்தல்‌ அறிக்கையில்‌ அரசுத்‌ துறை மற்றும்‌ அரசுக்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள நிறுவனங்களில்‌ தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல்‌ பணிபுரிந்து வரும்‌ அனைத்து ஒப்பந்த மற்றும்‌ தற்காலிக பணியாளர்களையும்‌ பணி நிரந்தரம்‌ செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்‌” என்று வாக்குறுதி அளித்து அதன்மூலம்‌ ஆட்சிக்‌ கட்டிலில்‌ அமர்ந்த பிறகு, தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரியத்தின்‌ கட்டுப்பாட்டில்‌ பத்து ஆண்டுகளுக்கும்‌ மேலாக பணிபுரிந்த தற்காலிக ஊழியர்களை ஒப்பந்த ஊழியர்களாக மாற்றுவது என்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும்‌ செயலாகும்‌. 

இது மக்களை ஏமாற்றும்‌ செயல்‌. வாக்குறுதியை நிறைவேற்றாததோடு மட்டுமல்லாமல்‌, அதற்கு எதிரான செயல்களில்‌ ஈடுபடுவது ஒரு ஆட்சிக்கு அழகல்ல. பணி நிரந்தரத்தை எதிர்பார்த்துக்‌ காத்துக்‌ கொண்டிருந்த ஊழியர்களை தனியார்‌ துறை ஊழியர்களாக மாற்றி இருக்கிறது தி.மு.க. அரசு. அரசே ஏமாற்றும்‌ பணியில்‌ ஈடுபடுவது கடும்‌ கண்டனத்திற்குரியது. இதற்குப்‌ பெயர்‌ சொன்னதைச்‌ செய்வேன்‌” என்பதல்ல. “சொல்வது ஒன்று, செய்வது ஒன்று” என்பதுதான்‌ இதன்‌ பொருள்‌. இது தி.மு.க. அரசின்‌ தொழிலாளர்‌ விரோதப்‌ போக்கிற்கு ஓர்‌ எடுத்துகாட்டு. இதுபோன்றவற்றை எல்லாம்‌ “சாதனை” என்று சொல்வது தான்‌ ஒரு வேளை “திராவிட மாடல்‌” போலும்‌! “திராவிட மாடல்‌” ஆட்சி தேவை இல்லை என்ற நிலைக்கு மக்கள்‌ வந்துவிட்டார்கள்‌.

முதலமைச்சர்‌  இதில்‌ உடனடியாகத்‌ தலையிட்டு, தேர்தல்‌ வாக்குறுதிப்படி, பத்து ஆண்டுகளுக்கு மேலாக சென்னை குடிநீர்‌ வழங்கல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றல்‌ வாரியத்தில்‌ பணியாற்றும்‌ தற்காலிக ஊழியர்களை நிரந்தரம்‌ செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்பதும்‌, தனியார்‌ நிறுவன ஊழியர்களாக ஆக்கியதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்‌ என்றும்‌, அவர்களுக்குரிய ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்‌ என்றும்‌ கேட்டுக்கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: #BREAKING எஸ்.பி.வேலுமணி வழக்கு.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

click me!