நீங்க ஊருக்குள்ள இருக்கணுமா ? வேண்டாமா ? போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பாமக, அதிமுக நிர்வாகிகள் !!

By Selvanayagam PFirst Published Apr 22, 2019, 8:55 PM IST
Highlights

தாராபுரம் அருகே போலீசாரை பீர் பாட்டிலால் தாக்கிய பாமகவினரை கைது செய்ததால் ஆத்திரமடைந்த பாமக மற்றும் அதிமுக நிர்வாகிகள் போலீஸ் இன்ஸ்பெக்டரை , இந்த ஊர்ல நீ குடியிருக்க முடியாது பார்த்துக்க என  மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்துவரும் சந்திரசேகரன் கடந்த 15 ஆம் தேதி இரவு ஊர்காவல் படை வீரர் சிவக்குமாருடன் சேர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். 

அலங்கியம் சாலை ரவுண்டானா அருகே கூட்டமாக நின்றிருந்த சிலரை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியபோது, அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தகராறில் ஈடுபட்டு அருகில் கிடந்த பீர்பாட்டிலை உடைத்து சந்திரசேகரனை குத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலாளர் ஜெயேந்திரன், ராம்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர். 

இது குறித்து தகவலறிந்து சென்ற பாமக மாநில துணை பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் ராசிபுரம் அதிமுக நகரச் செயலாளர் காமராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்ட இருவரையும் விடுவிக்கக் கோரி காவல் ஆய்வாளர் ராஜாக்கண்ணுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கைது செய்துள்ளவர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும் இல்லையென்றால் ஊருக்குள் குடியிருக்க முடியாது என்றும் அதிமுக நகரச் செயலாளர் மிரட்டியுள்ளார்.

இப்ப எஸ்.பி உங்கிட்ட பேசுவாங்க. இந்த ஊர்ல நீ குடியிருக்க முடியாது பார்த்துக்க” என்று அந்த நிர்வாகி மிரட்டுகிறார். அதற்கு இன்ஸ்பெக்டரோ, தேவையில்லாமல் பேசக்கூடாது என்கிறார். அத்துடன் அந்த காணொளி முடிகிறது. இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவுவதால் திருப்பூரில் இருந்து தாராபுரத்திற்கு கூடுதல் போலீசார்  குவிக்கப்பட்டுள்ளனர்.

click me!