பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை விடுத்துள்ளார்
.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் மற்றும் சி.பி.எஸ்.இ முடிவுகள் வந்ததும், ஜூலை 31ம் தேதிக்கு பின்னரே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவித்தார்.
சில தனியார் கல்லூரிகள் தற்போதே மாணவர் சேர்க்கையை துவக்கி உள்ளதாகவும், தேர்வு முடிவு வருவதற்கு முன் மாணவர் சேர்க்கை துவங்கும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார். அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் எந்தவித விதியும் திருத்தப்படவில்லை எனவும் , தமிழ்நாட்டில் நீட் நுழையாமல் இருக்க ஏ.கே.ராஜன் கமிட்டி அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார்.
துணை வேந்தர்கள் நியமனம் செய்ய தனியாக குழு அமைக்க உள்ளதாக கூறிய அவர், தமிழ்நாட்டை சார்ந்தவர்கள் தான் துணை வேந்தர்களாக இருக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் எண்ணம் எனவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதிப்பட தெரிவித்தார்.