பணியின் போது இதை செய்யாவிட்டால் ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை.. போக்குவரத்து கழகம் எச்சரிக்கை..!

By vinoth kumarFirst Published Sep 21, 2021, 6:16 PM IST
Highlights

நடத்துநர்கள் பணியின் போது எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்குதல் அறவே தவிர்த்திடல் வேண்டும். அனைத்து கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இந்த அறிவுறுத்தல்களை ஓட்டுனர், நடத்துநர்கள் தவறாது பின்பற்றுவதை உறுதிசெய்தல் வேண்டும்.

பணியின்போது முககவசம் அணியாத ஓட்டுனர் நடத்துநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது. 

இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழகம் ஓட்டுனர், நடத்துநர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்;- சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் சார்ந்த திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தின் எல்லைப்புற பகுதிகளில் மாநகர போக்குவரத்துக்கழகம் பேருந்துகளை இயக்கி வருகிறது. கொரோனா தொற்று பரவுதலை அறவே தவிர்த்திடும்  பொருட்டு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அரசு அறிவுறுத்தியுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி தவறாது பின்பற்றப்பட வேண்டும் என அனைத்து மாநகர போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கும் ஏற்கனவே சுற்றறிக்கை வழி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஒரு அவசிய நினைவூட்டலாக கொரோனா வைரஸ் தொற்று பரவலை அறவே தவிர்த்திடும் பொருட்டு அனைத்து ஓட்டுனர், நடத்துநர்கள் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்து பணிபுரிய வேண்டும். பணியின்போது பயணிகள் முக கவசம் அணிந்து பயணிக்க நடத்துநர்கள் அறிவுறுத்த வேண்டும்.  ஓட்டுனர், நடத்துநர்கள் தங்களது கைகளை அடிக்கடி சோப் கொண்டு சுத்தம் செய்து பாதுகாப்பாக  பணிபுரிய வேண்டும்.

நடத்துநர்கள் பணியின் போது எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்குதல் அறவே தவிர்த்திடல் வேண்டும். அனைத்து கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இந்த அறிவுறுத்தல்களை ஓட்டுனர், நடத்துநர்கள் தவறாது பின்பற்றுவதை உறுதிசெய்தல் வேண்டும். பணியின்போது முகக்கவசம் அணியாமல் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

click me!