குரூப்-1 தேர்வில் பரியேறும் பெருமாள்.. தேர்வின் தரத்தையே குறைத்துவிட்டதாக கொதிக்கும் கொங்கு ஈஸ்வரன்.

By Ezhilarasan BabuFirst Published Jan 4, 2021, 2:09 PM IST
Highlights

திரைப்படங்கள் மக்களின் பொழுதுபோக்கே தவிர அவை அரசு பணியிடங்களுக்கான மதிப்பீடு அல்ல. தேர்வுக்கு தங்களை தயார்ப்படுத்தி கொள்பவர்கள் அனைவரும் முதலில் தவிர்ப்பதே பொழுதுபோக்கான திரைத்துறையை தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

குரூப்-1 தேர்வில் பரியேறும் பெருமாள் திரைப்படம் பற்றிய கேள்வி இடம் பெற்றிருப்பதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை கண்டிக்கிறோம் என கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: நேற்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் பரியேறும் பெருமாள் திரைப்படம்  குறித்து கேள்வி இடம் பெற்றிருப்பது அரசு பணியிடங்களுக்கான தேர்வினுடைய தரத்தை வெளிகாட்டியிருக்கிறது. திரைப்படம் தொடர்பான கருத்துகள் அரசு பணியிடங்களுக்கான தேர்வில் கேள்வியாக இடம் பெறுவது அவசியமா ? என்ற விவாதமும் தேர்வு எழுதியவர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. 

இது குரூப்-1 தேர்வுத்தாள் தயாரித்தவர்களின் உள்நோக்கமா ? அல்லது தமிழக அரசினுடைய உள்நோக்கமா ? என்ற சந்தேகமும் வலுத்திருக்கிறது. இப்படிப்பட்ட கேள்வி மூலம் தேர்வு எழுதுபவர்களின் அறிவுத்திறனை ஆராய்ந்து பார்க்க முடியுமா ? அறிவுசார்ந்த சம்பந்தப்பட்ட துறைகளில் கேட்க கேள்விகள்தான் இல்லையா ?. தேர்வு எழுதுபவர்கள் ஒவ்வொரு கேள்வியின் முக்கியத்துவத்தை அறிந்து தங்களை தேர்வுக்கு தயார்ப்படுத்தி கொள்ளும் சூழ்நிலையில் பொழுதுபோக்கு சம்பந்தப்பட்ட திரைத்துறையை அரசு தேர்வில் புகுத்துவது ஏற்புடையதல்ல. திரைப்படங்கள் மக்களின் பொழுதுபோக்கே தவிர அவை அரசு பணியிடங்களுக்கான மதிப்பீடு அல்ல. தேர்வுக்கு தங்களை தயார்ப்படுத்தி கொள்பவர்கள் அனைவரும் முதலில் தவிர்ப்பதே பொழுதுபோக்கான திரைத்துறையை தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 

அறிவுசார்ந்து பயணிக்கும் இளைய சமுதாயத்தை நல்வழியில் கொண்டு செல்வதே நல்ல நோக்கமாக இருக்கும். இனிமேலாவது தமிழக அரசு கவனக்குறைவாக செயல்பட கூடாது. அரசு பணியிடங்களுக்காக நடத்தப்படும் தேர்வுகளின் தரம் இதுபோன்ற திரைத்துறை கேள்விகளால் கேலிக்கூத்தாக பார்க்கப்படுகிறது. எனவே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளின் கேள்வித்தாள்களை தமிழக அரசு விழிப்புடன் கையாள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!