
சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது இதுதொடர்பாக விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 12ம் தேதி பெங்களூரு சிறைத்துறை டிஐஜி டி.ரூபா காவல்துறை ஐ.ஜி ஆர்.கே.தத்தாவுக்கு அனுப்பிய அறிக்கையில் தன்னுடன் பணிபுரியும் உயர் அதிகாரி ஒருவர் சிறையில் சசிகலாவுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுப்பதற்காக ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பாக சிறைத்துறை எச்.எஸ்.சத்யநாராயண ராவ், அவரது அலுவல் உதவியாளரும் சசிகலா தரப்பிடமிருந்து லஞ்சம் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சசிகலா அடைக்கப்பட்டுள்ள அறையிலேயே தற்காலிக சமையலிடம் உருவாக்கப்பட்டுள்ளது. அவருக்கு சமைத்துக் கொடுக்க சிறையில் இருக்கும் பெண்மணி ஒருவரை பிரத்யேகமாக ஏற்பாடு செய்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை உள்துறை செயலருக்கும், ஊழல் தடுப்பு ஆணையத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக கர்நாடகா முதல்வர் சித்தராமய்யா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பெங்களூரு மத்திய சிறைச்சாலையில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணை முடியும்வரை பொறுமையுடன் இருங்கள். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் குறிப்பிட்டார்.
இந்நிலையில், கார்நாடக முதல்வர் சித்தாரமய்யா, பெங்களூரு, பரப்பன அக்ரஹார மத்திய சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க, ரூ.2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார் குறித்து விசாரதணை நடத்த, உள்துறை அமைச்சகத்தில் பணிபுரியும் வினய்குமார் என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் விசாரணை தொடங்கி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.