பாமக கூட்டணி இல்லையென்றால் அதிமுக ஆட்சி இல்லை... அதிமுகவை நயமாக விமர்சித்த அன்புமணி ராமதாஸ்!

By Asianet TamilFirst Published Dec 31, 2019, 10:37 PM IST
Highlights

"கூட்டணியே வேண்டாம் என்ற கொள்கையில் நாம் இருந்தோம். அதை மாற்றி கூட்டணிக்குச் சென்றோம். இப்போது நாம் அவர்களிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறோம். அதிமுக நமக்கு உரிய இடங்களை ஒதுக்கவில்லை. அதுவும் அந்தந்த மாவட்ட அதிமுக தலைவர்களிடம் சீட்டு கேட்டு பேச்சுவார்த்தை நடத்துவது வருத்தமளிக்கிறது. வருங்காலத்தில் அதிமுக தலைமை எங்களது கருத்துகளை ஏற்று இந்தத் தவறை சரி செய்ய வேண்டும்” என்று அன்புமணி ராமதாஸ் பேசினார். 
 

தமிழகத்தில் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைக்காமல் போயிருந்தால் இன்று அவர்கள் (அதிமுக) ஆட்சியில் இருந்திருக்க முடியாது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டையொட்டி விழுப்புரத்தில் பாமக சார்பில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை வகித்தார். தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்தக் கூடாது, தமிழகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்புகளில் 80 சதவீதம் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க வேண்டும், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் அல்லது காலவரையற்ற பரோல் வழங்க வேண்டும் உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இக்கூட்டத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியது அதிமுக கூட்டணியில சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. “நாடாளுமன்றத் தேர்தலின்போது 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தது. தங்களுடைய ஆட்சி நீடிக்க வேண்டும் என்று அதிமுக நம்மிடம் கேட்டுக்கொண்டது. அனைத்தையும்  நாம் விட்டு கொடுத்தோம். அன்று அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைக்காமல் போயிருந்தால் இன்று அவர்கள் ஆட்சியில் இருந்திருக்க முடியாது. ஆனால், இன்றோ நாம் உள்ளாட்சித் தேர்தலில் அரை சீட், கால் சீட்டுக்கான நம்மை கெஞ்ச வைப்பது வருத்தமளிக்கிறது.  நாம் கூட்டணி வைத்ததற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
கூட்டணியே வேண்டாம் என்ற கொள்கையில் நாம் இருந்தோம். அதை மாற்றி கூட்டணிக்குச் சென்றோம். இப்போது நாம் அவர்களிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறோம். அதிமுக நமக்கு உரிய இடங்களை ஒதுக்கவில்லை. அதுவும் அந்தந்த மாவட்ட அதிமுக தலைவர்களிடம் சீட்டு கேட்டு பேச்சுவார்த்தை நடத்துவது வருத்தமளிக்கிறது. வருங்காலத்தில் அதிமுக தலைமை எங்களது கருத்துகளை ஏற்று இந்தத் தவறை சரி செய்ய வேண்டும்” என்று அன்புமணி ராமதாஸ் பேசினார். 

click me!