குழந்தைக்கு பெயர் வைப்பதற்கெல்லாம் வழக்கா?  பிரச்சனையை நீதிபதி எப்படி தீர்த்து வச்சாரு பாருங்க!!

First Published May 11, 2018, 8:32 AM IST
Highlights
A special case in Kerala hc to neame to a child with couples


கேரளாவில் கணவன் – மனைவி விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போது அவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு இந்து பெயர் வைப்பதா ? கிறிஸ்துவ பெயர் வைப்பதா? எனறு எழுந்த பிரச்சனை தொடர்பான வழக்கில் அந்த குழந்தைக்கு நீதிபதியே பெயர் வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கேரள உயர்நீதி மன்றத்தில்  ஒரு ருசிகரமான வழக்கு விசாரணைக்கு வந்தது. காதல் திருமணம் செய்து கொண்ட கிறிஸ்தவ பெண்ணுக்கும், இந்து ஆணுக்கும் பிறந்த 2-வது குழந்தைக்கு பெயர் சூட்டும் பிரச்சனை தொடர்பாக  வழக்கு அது.

ஏற்கனவே இந்த கணவன்-மனைவி இருவரும் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்நிலையில், அந்த குழந்தை, தற்போது தாயின் பராமரிப்பில் இருக்கிறது.

குழந்தைக்கு ‘ஜோகன் மணி சச்சின்’ என்று ஞானஸ்நானம் செய்யப்பட்டு இருப்பதால், அதே பெயரையே சூட்ட வேண்டும் என்று தாயார் தரப்பு வாதிட்டது. ஆனால், குழந்தை பிறந்த 28-வது நாளில், இந்து முறைப்படி சூட்டப்பட்ட ‘அபிநவ் சச்சின்’ என்ற பெயரே இருக்க வேண்டும் என்று தந்தை தரப்பு வாதிட்டது.

அவர்களின் வாதங்களை கேட்ட நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார், இருதரப்பையும் சமாதானப்படுத்தும் வகையில், குழந்தைக்கு ‘ஜோகன் சச்சின்’ என்று தானே பெயர் சூட்டினார். தாயாரை திருப்திப்படுத்த ‘ஜோகன்’ என்ற பெயரையும், தந்தையை திருப்திப்படுத்த ‘சச்சின்’ என்ற பெயரையும் எடுத்துக்கொண்டதாக அவர் கூறினார்.

குழந்தையை பள்ளியில் சேர்க்க பிறப்பு சான்றிதழ் அவசியம் என்பதால், 2 வாரங்களுக்குள் இந்த பெயரில் பிறப்பு சான்றிதழ் வழங்குமாறு நகராட்சி பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

கேரளாவில் இந்த வழக்கு வழக்கறிஞ்ர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் நீதிபதியின் செயலைப் பாராட்டினர்.

click me!