ஆளுநர் தாமாக பேசிய எந்த உரையும் அவை குறிப்பில் பதிவேற்ற கூடாது..! அதிரடியாக உத்தரவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்

By Ajmal KhanFirst Published Jan 9, 2023, 12:33 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவையில் ஒப்புதல் அளித்த உரையை தவிர்த்து ஆளுநர் பேசிய எந்த வார்த்தையையும் பதிவேற்றம் செய்யக்கூடாது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதையடுத்து கூட்டத்தில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியில் வெளியேறினார். 
 

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையோடு கூட்டம் தொடங்கியதும், திமுகவின் கூட்டணி கட்சிகள்  ஆளுநர் இருக்கையை முற்றுக்கையிட்டு முழக்கம் எழுப்பினர். அப்போது தமிழ்நாடு எங்கள் நாடு எனவும் ஆளுநரை சட்டப்பேரவையில் இருந்து வெளியேறவேண்டும் என கோஷமிட்டனர். இதனையடுத்து திமுக கூட்டணி கட்சிகள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை படிக்கும் போது தமிழக அரசு சார்பில் தயாரித்த உரையில் ’திராவிட மாடல்’ அமைதி பூங்கா தமிழ்நாடு' என்ற வாக்கியத்தையும் ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்தார். 

மேலும்  சமூகநீதி, சுயமரியாதை, திராவிட மாடல் என்ற வார்த்தைகள் இருந்ததால் 65வது பத்தியை வாசிக்காமல் முழுமையாக கடந்து அடுத்த அறிவிப்பிற்கு சென்றார். இதனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்ணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஆளுநர் தனது உரையை முடிவடைந்ததும் சட்டப்பேரவை கூட்டத்தில் இடையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநருக்கு முழு மரியாதை அளித்து நாங்கள் கண்ணியத்துடன் நடந்து கொண்டோம். எங்கள் கொள்கைக்கு மாறாக மட்டுமல்ல, அரசின் கொள்கைக்கு மாறாகவும் ஆளுநர் நடந்து கொண்டுள்ளார். அரசு தயாரித்த ஆளுநர் இசைவளித்து அச்சிடப்பட்ட உரையை முறையாக படிக்காதது வருத்தமாக இருக்கிறது.

ஆளுநர் உரை தொடங்குவதற்கு முன் எங்கள் எதிர்ப்பு எதையும் பதிவு செய்யவில்லை என  முதலமைச்சர் பேசி கொண்டு இருக்கும் போதே ஆளுநர் ஆர்.என் ரவி கூட்டத்தில் இருந்து பாதியில் வெளிநடப்பு செய்தார். இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர்  தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 17 ஐ தளர்த்தி அச்சிடப்பட்ட ஆளுநர் உரையை மட்டும் இடம்பெற செய்ய வேண்டும் என சபாநாயகருக்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.  

ஆளுநர் உரையில் அச்சிடப்பட்டு இடம்பெறாமல் தாமாக முன்வந்து பேசிய எந்த உரையும் அவை குறிப்பில் பதிவேற்ற கூடாது என முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 

click me!