நிலச்சரிவில் சிக்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய நாய் !! கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம் !!

By Selvanayagam PFirst Published Aug 13, 2018, 6:36 AM IST
Highlights

நிலச்சரிவில் சிக்கவிருந்த  குடும்பத்தைக் காப்பாற்றிய நாய் !!  கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம் !!

கடந்த மே மாத இறுதியில்  கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் கடந்த சில நாட்களாக  வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டி வருகிறது. இதனால் கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உள்ள  ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் 1,750  தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இங்கு தஞ்சம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதல் முகாம்கள் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

மழை, வெள்ளம் மற்றும் மண் சரிவால் மாநிலம் முழுவதும் இதுவரை 37 பேர் பலியாகி உள்ளனர். 1,500 வீடுகள் பலத்த சேதம் அடைந்தன. இதில் 101 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்தன. வயநாடு மாவட்டத்தில் உள்ள மனந்தவாடி, விதிரி ஆகிய மலைநகரங்களுக்கு செல்லும் சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் இந்த சிறு நகரங்கள் உடனான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டது.

ஆசியவிலேயே மிகப் பெரிய அணையான இடுக்கி அணையில் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருவதால் அதன் துணை அணையான செருதோணி அணையில் உள்ள 5 மதகுகளும் திறந்து விடப்பட்டுள்ளதால் கரையோர மக்களை அங்கிருந்து வெளியேறும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரித்தது.

இந்நிலையில் இடுக்கி மாவட்டம்  கஞ்சிக்குழி  என்ற கிராமத்தில்  மோகனன் என்பவர் தனது குடும்பத்தாருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை  3 மணி அளவில் அவரது வளர்ப்பு நாள் தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்துள்ளது.

ஆனால் நாய் வழக்கம் போல் குரைத்துக் கொண்டிருப்பதாக நினைத்த மோகனன், திரும்பவும் தூங்கியுள்ளார். ஆனால் தொடர்ந்து நாய் ஆக்ரோஷமாக ஊளையிட்டதால் வீட்டுக்குள்ளிருந்து வெளியே எழுந்து சென்று  பார்த்தபோது, அந்த வீட்டின் அருகே நிலச்சரிவு ஏற்படுவதைப் பார்த்த மோகனன் உடனயாக வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் மகளை வீட்டை விட்டு வெளியேறினார்.

அதே நேரத்தில் அந்த வீட்டு மாடியில்  தூங்கிக் கொண்டிருந்த தனது தாத்தா, பாட்டியை வெளியேற்ற முயன்றபோது நிலச்சரிவு ஏற்பட்டு அந்த வீடு மண்ணுக்குள் புதைந்து விட்டது. இதில் அந்த தாத்தா, பாட்டி மரணமடைந்தனர்.

ஏற்கனவே மோகனனின் வீடு  பெரியார் அணையை ஒட்டி உள்ள இடத்தில் இருந்ததால் அவர்களை  அதிகாரிகள் வெளியேற கூறியுள்ளனர். .இதை அடுத்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த வீட்டிற்கு வாடகைக்கு குடிவந்துள்ளார். தற்போது அந்த வீடும் நிலச்சரிவில் சிக்கி புதையுண்டுபோனது.

ஆனாலும் தற்போது இந்த பெரும் விபத்தில் இருந்து தங்கள் வீட்டு நாய் அவர்களை காப்பாற்றியுள்ளதை நன்றிப் பெருக்குடன் அனைவரிடமும் நெகிழ்ச்சியுடன் கூறி வருகிறார்.

click me!