தமிழகத்தின் பொருளாதாரத்தைச் சீரமைக்க 7 முக்கியமான செயல் திட்டங்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காஞ்சிபுரத்தில் அறிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரண்டாம் கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். காஞ்சிபுரத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன், தமிழகத்தின் பொருளாதாரத்தை டிரில்லியன் அளவுக்கு எட்டுவதற்கான 7 செயல் திட்டங்களை அறிவித்தார்.
இதுகுறித்து கமல்ஹாசன் கூறுகையில், “கிராம பஞ்சாயத்து முதல் முதலமைச்சர் அலுவலகம் வரை காகிதங்களற்ற அலுவலகங்கள் என்கின்ற முக்கிய திட்டத்தை அறிமுகப்படுத்துவோம். காகித கோப்புகளை தடை செய்து அதனால் ஏற்படும் தாமதங்களை நீக்கி இணையவழியில் நேர்மையான வெளிப்படையான துரிதமான அரசு அமைவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஏற்படுத்துவோம்.
இணைய தொடர்பு என்பது மக்களின் அடிப்பைடை உரிமையாக அறிவிக்கப்பட்டு அதற்கான முன்னெடுப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இணைய வசதி செய்து கொடுக்கப்படும். இது வரை இல்லாத அளவில் ஒரு அரசின் மிகப்பெரு முதலீடாக இது அமையும்.
கிராமப்புரங்களில் இருக்கும் மனித வள ஆற்றலை சரியாக பயன்படுத்தும் வகையில் தொழில் முனைவோர்களையும் தொழில் நிறுவனங்களையும் நகர்புரங்களுக்கு இணையாக கிராமபுரங்களில் தங்கள் கிளை அலுவலகங்கங்களை அமைக்கும்படி எங்கள் அரசு வலியறுத்தும்.
பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் முனையும் ஆற்றல் என்று அனைத்து வகையிலும் பெண்கள் முன்னேறிட எங்கள் அரசு செயல் திட்டங்களை வகுக்கும்.
விவசாயத் தொழில் என்பதை வெறும் வார்த்தையாக இல்லாமல், அது உண்மையிலே வருமானமும் லாபமும் உள்ள ஒரு நேர்மையான வணிகமாக மாற்றுவதற்கான அனைத்து முன்னெடுப்புகளும் எங்கள் அரசால் செய்து தரப்படும். விவசாயத் தொழில் செழித்திட சரியான போக்குவரத்து, விளைப்பொருட்களை சேமித்து பாதுகாத்திட தேவையான குளிர் சாதன கிடங்குகள் போன்றவையும் அமைக்கப்படும்.
மாறிவரும் சூழலியலுக்கு ஏற்ற வகையில் சூழலியல் சுகாதார மேம்பாடு என்பது எங்கள் அரசின் முழு முதற் கொள்கைகளில் ஒன்றாக அமையும்.
வறுமைக்கோடு என்கிற பழைய அளவீடு மாற்றப்பட்டு செழுமைக்கோடு என்கிற புதிய அளவீடு அமையப் பெறும். ஒவ்வொரு குடிமகனின் அறிவும், திறனும் சரிவர வெளிக்கொண்டு வரப்பட்டு அதற்கு ஏற்ற வகையிலான திட்டங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பொருளியலைச் சீரமைத்து டிரில்லியன் எக்கனாமி எனும் இலக்கை நோக்கிய எமது செயல்திட்டத்தின் 7 முக்கியமான சிறப்பம்சங்களை பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் அறிவித்துள்ளேன்” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.