
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் அறிவுறுத்தல்படி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டைக் கொண்டு வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
இட ஒதுக்கீடு அறிவிப்பு
நீட் நுழைவுத் தேர்வால் தமிழகத்தில் அரசுப் பள்ளி மற்றும் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட தமிழக கிராமப் புற அரசுப் பள்ளி மாணவர்களுக்காக முந்தைய அதிமுக ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட அளவு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் கிடைத்து வருகின்றன. இவர்களுக்கான படிப்புச் செலவையும் தமிழக அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து பொது நல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.
சென்னை நீதிமன்றம் உத்தரவு
இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின் இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் இன்று தீர்ப்பை உயர் நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி தீர்ப்பளித்த தலைமை நீதிபதி அமர்வு, "அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் உத்தரவு செல்லும். இட ஒதுக்கீட்டை எதிர்த்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன” என்று நீதிமன்றம் அறிவித்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வரவேற்றுள்ளன.
அண்ணாமலை ரியாக்ஷன்
இந்நிலையில் இந்தத் தீர்ப்பை தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையும் வரவேற்றுள்ளார். அண்ணாமலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத இட உள் ஒதுக்கீடு வழங்குவதை உறுதிப்படுத்திய உயர்நீதிமன்ற தீர்ப்பை தமிழ்நாடு பா.ஜ.க வரவேற்கிறது. எங்கள் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடந்த 2017-ஆம் ஆண்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது உள் ஒதுக்கீடு வழங்குமாறு தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைத்தார். இந்த உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்த எங்கள் கூட்டணி கட்சியான அ.தி.மு.கவை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் நன்றி” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.