தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையில் மாண்புமிகுக்களை விட இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்களே கெத்து காட்டி வருகின்றனர். இவர்களின் கைகளில் தான் அதிமுக அரசின் எதிர்காலம் உள்ளது.
எம்.எல்.ஏ.க்கள் அணி தாவுவதை தடுக்க அதிமுக அரசு ரொம்பவே மெனக்கெட்டு வருகிறது. ரகசியக் கூட்டம் நடத்திய தலித் எம்.எல்.ஏ.க்கள் ஆகட்டும், தோப்பு வெங்கடாச்சலம் அணியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகட்டும் அனைவரையும் அரவணைத்தே செல்வது என்ற நிலைப்பாட்டை எடப்பாடி அரசு எடுத்துள்ளது.
கடந்த 23 ஆம் தேதி தலைமைச் செயலகம் சென்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினர். அப்போது கூவத்தூரில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து எம்.எல்.ஏ.க்கள் விரிவாகவே பேசினார்களாம்.
எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்திய சூழலில், நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிருப்தியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே தங்கதமிழ்ச்செல்வன், வெற்றிவேல், இன்பதுரை, பார்த்திபன், தங்கதுரை ஆகிய 5 எம்.எல்.ஏ.க்கள் தலைமைச் செயலகம் சென்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசியுள்ளனர்.