5 லட்சம் பேரை கூட்டனும்! மோடியை மிரட்டனும்! ஸ்டாலினை அரட்டனும்! எடப்பாடி ஆவேசம்!

By vinoth kumarFirst Published Sep 13, 2018, 11:55 AM IST
Highlights

சென்னையில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 5 லட்சம் அ.தி.மு.க தொண்டர்களை திரட்டி அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறியுள்ளார். 

சென்னையில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 5 லட்சம் அ.தி.மு.க தொண்டர்களை திரட்டி அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறியுள்ளார். ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வி, தினகரன் செல்லும் இடமெல்லாம் கூடும் கூட்டம் போன்றவை காரணமாக அ.தி.மு.க தமிழகத்தில் பலத்தை இழந்துவிட்டது என்று பரவலாக ஒரு பேச்சு உள்ளது. மேலும் தோல்வி பயம் காரணமாகவே உள்ளாட்சி தேர்தலை கூட நடத்தாமல் அ.தி.மு.க அரசு ஏய்த்து வருவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. மேலும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தினகரனுடன் கூட்டணி வைக்க பலரும் ஆர்வமாக உள்ளனர்.

 

ஆனால் கைவசம் 37 எம்.பிக்களை வைத்துள்ள தமிழகத்தை ஆளும் கட்சியான அ.தி.மு.கவுடன் கூட்டணி சேர சரத்குமார் கூட தயங்குகிறார். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக பல்வேறு வியூகங்களை ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் இணைந்து வகுத்து வருகின்றனர். அதன் ஒரு அம்சமாகவே சென்னை நந்தனத்தில் மிக பிரமாண்டமாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நிறைவை கொண்டாட முடிவெடுக்கப்பட்டது. 

அரசியல் ரீதியாக தங்களை ஏளனம் செய்பவர்கள் மற்றும் தி.மு.க தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் மட்டும் அல்ல பிரதமர் மோடியுமே கூட மிரளும் வகையில் நந்தனத்தில் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பது தான் அ.தி.மு.கவின் திட்டம். இது குறித்து தான் நேற்று சென்னையில் நடைபெற்ற மூத்த அமைச்சர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிக நேரம் பேசியுள்ளார்.

இழந்த பெருமையை மீட்க வேண்டும் என்றால் நந்தனம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நாடே திரும்பி பார்க்கும் வகையில் கொண்டாட வேண்டும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். குறைந்த பட்சம் 5 லட்சம் பேரையாவது அழைத்து நிகழ்ச்சியை நடத்தினால் தான் மோடி மட்டும் அல்ல ஸ்டாலின் கூட மிரள்வார்.

அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை தற்போதே செய்ய வேண்டும் என்று எடப்பாடி கூறியுள்ளார். அதற்கு என்னனா தராளமாக செய்துவிடலாம் என்று அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி அப்போது அவரிடம் கூறியுள்ளனர்.

click me!