தலைமறைவான ராஜேந்திர பாலாஜி… கைது செய்ய 4 தனிப்படைகள் அமைத்தது காவல்துறை!!

By Narendran SFirst Published Dec 17, 2021, 7:29 PM IST
Highlights

தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைத்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைத்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி மூலம் ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் ரவீந்திரன் மற்றும் விஜய் நல்லதம்பி ஆகியோர் அளித்த புகாரில், ராஜேந்திர பாலாஜி மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ராஜேந்திர பாலாஜியுடன் இருந்த என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீதும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த இரு வழக்குளில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜியும், ஒரு வழக்கில் முன் ஜாமீன் கோரி மற்ற மூவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை இன்று உயர்நீதிமன்ற நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு நடைபெற்றது.

அச்சமயம் ராஜேந்திர பாலாஜி சார்பில், இந்த குற்றத்தில் ராஜேந்திர பாலாஜிக்கு எந்த தொடர்பும் இல்லை என வாதிடப்பட்டது. கவுன்சிரி சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழங்கறிஞர் அசல் முகமது ஜின்னா, ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான புகாரில் 23 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் ராஜேந்திர பாலாஜிக்கு, உதவியாளர் பலராமன் மூலம் தான் பண பரிமாற்றம் நடைபெற்றதாக வாதிட்டார். மேலும் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அனைத்து ஆவணங்களும் உள்ளதாகவும், அவர் தொடர் குற்றவாளி என்றும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன், விஜய் நல்லத்தம்பி ஆகியோரின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அப்போது ராஜேந்திர பாலாஜி தரப்பில் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால், தள்ளுபடி உத்தரவை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த புகார்களில் தண்டனையை நிறுத்தி வைப்பதில்லை என கூறி ராஜேந்திர பாலாஜி கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார். ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து தலைமறைவானார். இந்த நிலையில்,  அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 4 தனிப்படை அமைத்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக டிஎஸ்பி, 2 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய அமைத்து விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

click me!