2024 நாடாளுமன்ற தேர்தல்.. பாஜகவுக்கு 400 இடங்கள்-தமிழகத்தில் 25 இடங்கள்.. அடித்துச் சொல்லும் அண்ணாமலை கணக்கு!

Published : Jun 15, 2022, 07:43 AM IST
2024 நாடாளுமன்ற தேர்தல்.. பாஜகவுக்கு 400 இடங்கள்-தமிழகத்தில் 25 இடங்கள்.. அடித்துச் சொல்லும் அண்ணாமலை கணக்கு!

சுருக்கம்

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 400 இடங்களில் பாஜக வெல்லும். இதில் தமிழகத்திலிருந்து 25 எம்.பி.க்கள் இருப்பார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. கும்பகோணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார். “கடந்த ஓராண்டில் திமுக ஆட்சியில் தமிழகத்தில் நிம்மதியாக இருக்கும் ஒரே குடும்பம் கோபாலபுரம் குடும்பம்தான். சாதாரண குடும்பத்தினருக்கு நிம்மதியே இல்லை. ஓராண்டில் கூட்டு பலாத்காரங்கள், கஞ்சா விற்பனை, படுகொலைகள் அதிகரித்துள்ளன. தவறு செய்பவர்களின் எண்ணிக்கைத்தான் அதிகமாகியுள்ளது. இதற்குக் காரணம், திமுக ஆட்சியில் போலீஸாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. லாக் அப் மரணங்கள் நடைபெறுவதற்குக் காரணம் போலீஸார் காரணம் அல்ல, ஆட்சியாளர்க தான் காரணம்.

தமிழக அமைச்சர்கள் 30 ஆண்டுகளாக நல்லவர்களாக போல மக்களிடம் நடித்து வந்தார்கள், தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களுடைய பழைய தொழில்கள் நினைவுக்கு வருவது போல பேசத் தொடங்கிவிட்டார்கள். இதெல்லாம் அவர்கள் முன்பு பிட்பாக்கெட், ரவுடிகளாக இருந்தார்கள் என்பதைத்தான் காட்டுகிறது. அவர்களுடையது பேச்சை பெண்கள் காது கொடுத்து கேட்க முடியாது. திமுக ஆட்சியாளர்கள் ஒரு சினிமா குடும்பம். அதனால்தான் திடீர் ஆய்வு என்ற பெயரில்  இரண்டு மூன்று சினிமா இயக்குனர்களை வைத்து சினிமா படப்பிடிப்பு போல நடத்திக்கொண்டிருக்கிறார்கள். 

திமுக தேர்தல் அறிக்கையில் 517 வாக்குறுதிகளில் 15 வாக்குறுதிகளைக்கூட இந்த ஆட்சியில் முழுமையாக நிறைவேற்றவில்லை. திமுகவின் ஓராண்டு கால ஆட்சி நிறைவில் குறைந்தபட்சம் 120 வாக்குறுதிகளையாவது நிறைவேற்றி இருக்க வேண்டும். கும்பகோணத்தை 100 நாட்களில் மாவட்டம் ஆக்குவோம் என வாக்குறுதி அளித்தார்கள். ஆட்சிக்கு வந்து 400 நாட்களை கடந்த பின்னரும் இதுவரை அதை நிறைவேற்றவில்லை. கும்பகோணத்தை மாவட்டமாக அறிவித்தால், இந்த நகரை ஆன்மீக நகராக அறிவித்து, மத்திய அரசின் வாயிலாக பல ஆயிரம் கோடிகள் நிதி ஒதுக்கீடு கிடைக்க செய்வோம். சிறப்பு ரயில் உள்ளிட்ட பல்வேறு விதமான வளர்ச்சிக்கும் பாடுபடுவோம். 

 தேர்தல் அறிக்கை நிறைவேற்றாதது குறித்து தமிழக மக்கள் சார்பில் பாஜக வெள்ளை அறிக்கை கேட்டது. ஆனால், திமுகவோ இதுவரை வாய்திறக்கவில்லை. இவர்களுடைய ஊழல் வெளியே தெரியக் கூடாது. குடும்ப ஆட்சியை பற்றி மக்கள் பேசிவிடக் கூடாது என்பதற்காக அவர்களுடைய உணர்ச்சிகளை தூண்டும் விதத்தில் மேகதாது அணை கட்டும் பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறார்கள். ஆனால், ஒரு போதும் மேதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டமுடியாது. இதை மத்திய அரசு நாடாளுமன்றத்திலேயே திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. பிரதமர் மோடி புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார் அதில் இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் நாடு முழுவதும் புதிதாக 10 லட்சம் மத்திய அரசு பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார். வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 400க்கும் மேற்பட்ட எம்.பி.க்களுடன் பாஜக 3-ஆவது முறையாக மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும். அதில் 25 எம்.பி.க்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்” என்று அண்ணாமலை பேசினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

DMK NDA Alliance : பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!
TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!