தேர்வுகள் நடத்தப்படாமல் முடிவுகள் வெளியிட்டது மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
பள்ளிக்கு வராதவர்கள், தனித்தேர்வர்கள், ப்ளஸ்-2 மதிப்பெண்கள் குறைவாக இருப்பதாக கருதும் மாணவர்கள் ஜூலை 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கொரோனா பரவல் நிலையை பொறுத்து அவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், ‘’12ம் வகுப்பில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 473 மாணவ, மாணவிகள் தேர்ச்சி; பள்ளிக்கு வராத 1,656 மாணவர்கள் தேர்வு எழுதாதவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்களை எந்த மாணவரும் எடுக்கவில்லை. தேர்வுகள் நடத்தப்படாமல் முடிவுகள் வெளியிட்டது மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். +2 மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை ஜூலை 22 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’’ என அவர் தெரிவித்தார்.
கொரோனா பரவல் காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 3 பாடங்களின் சராசரி அடிப்படையில் 50 மதிப்பெண்களும், 11ம் வகுப்பில் 20 விழுக்காடும், 12ம் வகுப்பில் செய்முறை மற்றும் அகமதிப்பீட்டில் 30 விழுக்காடு மதிப்பெண்களும் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது ஒரு பாடத்தில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் 88.5 என்று வந்தால் அதை 89 ஆக மாற்றி முழு மதிப்பெண் வழங்கும் முறை கடந்த ஆண்டு வரை இருந்தது. ஆனால், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள மதிப்பெண்கள் தசம முறையில் இருக்கும். அதாவது, உயர்கல்வியில் மாணவர்கள் சேர்வதற்கு ஏற்ப கட்-ஆப் மதிப்பெண்களை கருத்தில் கொண்டு அவர்களின் மதிப்பெண்களின் கூட்டுத் தொகை அப்படியே தசம எண்ணில் வழங்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.