தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில் இதை இது வரை பெறாதவர்கள் பொங்கல் முடிந்ததும் பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ரேஷன் கடைகளில் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசும், பொங்கல் வைப்பதற்குத் தேவையான பொருட்களும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி கடந்த 7 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே திமுக சார்பில் பொங்கல் பரிசு வழங்கக் கூடாது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து பொங்கல் பரிசு வழங்க தடைவிதிக்கப்பட்டது.
ஆனால் தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து பொங்கல் பரிசு வழங்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இந்த இரண்டு மூன்று நாட்களில் பொங்கல் பரிசு வழங்க ஒரு சிறு தடை ஏற்பட்டதால் ஏராளமான குடும்பத்தினர் அதை வாங்க முடியாமல் போய்விட்டது.
இந்நிலையில் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், இதுவரை பொங்கல் பரிசு பெறாதவர்கள் பொங்கல் முடிந்ததும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.