"இன்னக்கி குருபூர்ணிமா அதனால் என் குருவை வணங்க வந்தேன்".. இபிஎஸ் தலையில் ஐஸ் கட்டி வைத்த கோகுலா இந்திரா...

By Ezhilarasan BabuFirst Published Jul 13, 2022, 2:39 PM IST
Highlights

அதிமுக தொண்டர்கள் கோவிலாக நினைக்கக்கூடிய இடத்தை கடப்பாரை கொண்டு ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பூட்டை உடைத்திருக்கிறார்கள், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும்,  சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி அதிமுக அலுவலகத்தை மூடியது சில்லறைத்தனமான ஆசை என்றும் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா விமர்சித்துள்ளார். 
 

அதிமுக தொண்டர்கள் கோவிலாக நினைக்கக்கூடிய இடத்தை கடப்பாரை கொண்டு ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பூட்டை உடைத்திருக்கிறார்கள், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும்,  சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி அதிமுக அலுவலகத்தை மூடியது சில்லறைத்தனமான ஆசை என்றும் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா விமர்சித்துள்ளார். மேலும், இன்று குரு பூர்ணிமா என்பதால் எனது குருவாக எண்ணக் கூடிய எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து குருவாக இருந்து கழகத்தை வழி நடத்த வேண்டும் என வாழ்த்து தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றி அங்கிருந்த ஆவணங்களை அள்ளிச் சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதால் வருவாய் துறை அதிகாரிகள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளனர்.

சீல் அகற்ற வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்று குரு பூர்ணிமா சிறப்பான நாள்,  யார் யாரை குருவாக நினைக்கிறார்களோ, அவர்களை குருவை வணங்கக் கூடிய நாள் இன்று, காலை கோவிலுக்கு சென்று விட்டு வழக்கம் போல புரட்சித்தலைவி, புரட்சித் தலைவரை வணங்கிவிட்டு  தற்போது அதிமுகவை மிகவும் சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து கட்சியையும், கட்சி தொண்டர்கள் அனைவரையும் குருவாக இருந்து வழி நடத்தவேண்டும் என்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன் என்றார். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஒன்றும் தெரியாதவர்கள் கூட விவரமே அறியாதவர்கள் கூட அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது ஓர் அராஜகச் செயல்,வன்முறை என்று கூறுவார்கள்.

நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன், நமது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், நத்தம் விஸ்வநாதன் அடிக்கடி ஒன்று கூறுவார் ஓபிஎஸ்-க்கு இரண்டு முகங்கள் இருக்கிறது என்று, ஓபிஎஸ் ஒன்றுமே தெரியாதது போல பேசுவார், ஆனால் மற்றவர்கள் வாழ்வதை அவர் பொறுத்துக் கொள்ள மாட்டார். அவரது மற்றொரு முகமான அகோரமான முகம் அதை அவர் காட்டியிருக்கிறார். அதை நிரூபிக்க கூடிய வகையில் தான் அவர் அதிமுக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆவணங்களை அள்ளிச் சென்றிருக்கிறார். அந்த நாளை யாராலும் மறுக்க முடியாது, அனைவருமே நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கின்றனர், நீதிமன்றம் என்ன சொல்லப் போகிறது என எதிர்பார்த்து நோக்கி இருக்கின்றனர்.

என்ன தீர்ப்பு சொல்ல போகிறார்கள் என்பது தெரிவதற்கு முன்பே வீட்டிலிருந்து புறப்பட்டு செல்லும்போதே அவரது வாகனத்தில் வெளி மாவட்டங்களைச்  சேர்ந்தவர்கள் தொங்கிக்கொண்டு போகிறார்கள். அவர்கள் இதை சாதிரீதியாக கொண்டு செல்ல திட்டமிட்டு கடப்பாரை கத்தி போன்ற ஆயுதங்களுடன் வந்திருக்கிறார்கள் என அவர் சரமாரியாக குற்றம் சாட்டினார். மேலும் பேசிய அவர், அதிமுக தொண்டர்கள் கோவிலாக நினைக்கக்கூடிய இடத்தை  கடப்பாரை கொண்டு உடைத்திருக்கிறார்கள். அந்த இடத்தை சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஆக்கி அலுவலகத்தை சீல் வைத்திருப்பது சில்லறைத்தனமான ஆசை, இனிமேல் ஓபிஎஸ் தர்மயுத்தம் சீன் போட முடியாது, இந்த விவகாரத்தில் அவரால் தர்மயுத்தம் சீன் போட முடியவில்லை,

தலைவராக இருந்த ஓபிஎஸ் இப்போது அராஜகச் செயல்களில் ஈடுபட்டதன் மூலம் அவர் மீது இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் கூட அவர் கெடுத்துக் கொண்டார். கட்சியை அழிக்க நினைக்கிறார், ஜெயலலிதா இருந்திருந்தால் அவரது மகன் ரவீந்திரநாத்  ஸ்டாலினை சந்தித்து நீங்கள் நல்ல ஆட்சி செய்கிறீர்கள் என்று மனு கொடுத்திருக்க முடியுமா? அம்மா எங்களுக்கு நல்ல பதவியை கொடுத்து அங்கீகாரம் கொடுத்தார்கள், எதிர்காலத்தில் இந்த கட்சி வளமானதாக மாற எடப்பாடி பழனிச்சாமியின் பின்னால் அணிலாஎ அணிவகுத்து நிற்போம், இவ்வாறு கோகுல இந்திரா கூறினார்.
 

click me!