ஈஷாவில் மலைச்சாரலில் கோலகலமாக நடந்த மாட்டுப் பொங்கல் விழா

By karthikeyan VFirst Published Jan 16, 2021, 2:13 PM IST
Highlights

கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகி முன்பாக மாட்டு பொங்கல் விழா  நேற்று (ஜனவரி 15) கோலாகலமாக நடைபெற்றது.

கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகி முன்பாக மாட்டு பொங்கல் விழா இன்று (ஜனவரி 15) கோலாகலமாக நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பழங்குடியினர் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மண் பானையில் பொங்கல் வைத்து உழவுக்கு உதவும் மாடுகளுக்கு நன்றி கூறினர்.

ஈஷாவில் வளர்க்கப்படும் காங்கேயம், ஓங்கோல், காங்கிரிஜ், உம்பளாச்சேரி, கிர் உள்ளிட்ட பல்வேறு ரக நாட்டு மாடுகள் மஞ்சள், சந்தனம், குங்குமம் பூசி அலங்கரிக்கப்பட்டு கண்காட்சியாக நிறுத்தப்பட்டு இருந்தன. ஈஷாவில் அழிந்து வரும் 23 நாட்டு மாடு இனங்கள் பராமரிக்கப்பட்டு வளர்த்து வரப்படுகிறது.

பொங்கலிடுதலை தொடர்ந்தது கலை நிகழ்ச்சிகளும் சத்குருவின் சிறப்பு சத்சங்கமும் நடைபெற்றது. தேவார பாடல்களுடன் துவங்கிய கலை நிகழ்சிகளில் பாரம்பரிய நாட்டுபுற தமிழ் பாடல்களும் நடனங்களும் இடம் பெற்றன,

இதில் சத்குரு பேசியதாவது:

பொங்கல் விழா என்பது தமிழ்நாட்டில் மிக முக்கியமான ஒரு விழா ஆகும். இவ்விழா விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் சம்பந்தப்பட்டது. அதேபோல உணவுக்கும், உணவுக்கு மூலமான  மண்ணுக்கு, நீருக்கு, விலங்குகளுக்கு எல்லாம் சம்மந்தபட்டது. அதனால் இதை உயிர்களின் விழா என்று சொல்ல முடியும். மேலும் இவ்விழா குறிப்பிட்ட கடவுள் அல்லது மதம் சார்ந்த விழா அல்ல.

இந்த கொரோனா பெருந்தோற்றால் உலகம் முழுவதும் பெருமளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் உயரிழந்தவர்களின் எண்ணிக்கையை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது மிக மிக குறைவாகும். இதற்கு நம் தமிழ் மக்களின் உணவு முறையும், வாழ்வியலும் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறன். இதனை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து பதிவு செய்ய வேண்டும்.

ஈஷா யோகா மையத்தில் 4200 பேர் இருந்தாலும் இதுவரை ஒருவர் கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. இதேபோல் கூடிய விரைவில் தமிழகம் முழுவதும் கொரோனா இல்லாத சுழல் உருவாக வேண்டும்.

தமிழகம் முழுவதும் கூடிய விரைவில் சூர்ய சக்தி என்ற யோகா பயிற்சியை இலவசமாக  கற்றுக்கொடுக்க உள்ளோம். இதற்காக 7000 யோகா ஆசிரியர்கள் தயாராக உள்ளனர். இந்தப் பயிற்சியின் மூலம் உடலில் தெம்பும் மனதில் தெளிவும் ஏற்படும். இப்பயிற்சியை 8 வயதிற்கு மேல் உள்ள எல்லாருக்கும் இந்த யோகா பயிற்சி சென்றடைய வேண்டும் என்பது என் விருப்பம். குறிப்பாக தமிழக இளைஞர்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

click me!