கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் தலைகீழாக ஆடாதீர்... இனிமேல் தான் இருக்கிறது கொரோனா வேட்டை..!

By Thiraviaraj RMFirst Published Sep 1, 2020, 12:38 PM IST
Highlights

அரசின் அடுக்கடுக்கான தளர்வு அறிவிப்புகளை பார்த்தவுடன் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டது என்று மக்கள் நினைத்துவிட வேண்டாம். கொரோனா பரவல் என்பது நாடு முழுவதும் அதிகமாகிக் கொண்டேதான் இருக்கிறது. 

கொரோனா தொற்றால் உலக நாடுகள் அனைத்தும் கதிகலங்கிப்போய் கிடக்கிறது. மொத்த பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்து விட்டது. கொரோனா மரணங்களை சந்தித்த குடும்பங்களும், கொரோனாவை எதிர்கொண்டு மீண்ட குடும்பங்களும் இன்னும் எதார்த்த நிலைக்கு திரும்பவில்லை. 5 மாதங்கள் கடந்த நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் எனக் கணிக்க முடியவில்லை. வேலை வாய்ப்பின்றி, போதிய வருமானம் இன்றி, கடன் தவணை கட்ட முடியாமல், குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் செலுத்த இயலாமல் அன்றாட வாழ்க்கையை கழிக்க முடியாமல் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி தவிக்கின்றனர். 


 
ஊரடங்கு உத்தரவுக்கு, இடையிடையே பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், மக்கள் எதிர்பார்த்த தளர்வு 160 நாட்களுக்கு பிறகே இப்போது கிடைத்திருக்கிறது. இன்று முதல் தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுவதுடன், மாவட்டத்திற்குள் பஸ் போக்குவரத்து தொடங்குகிறது. சென்னையில் வரும் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்குகிறது. நிறுவனங்கள் அனைத்தும் 100 சதவீத பணியாளர்களுடன் முழுமையாக இயங்கலாம் எனக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. 

ஏதோ, அரசின் அடுக்கடுக்கான தளர்வு அறிவிப்புகளை பார்த்தவுடன் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டது என்று மக்கள் நினைத்துவிட வேண்டாம். கொரோனா பரவல் என்பது நாடு முழுவதும் அதிகமாகிக் கொண்டேதான் இருக்கிறது. உலக வரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்தியா, 2-வது இடத்தில் உள்ள பிரேசிலை பின்னுக்கு தள்ளும் உத்வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் நாள்தோறும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். கட்டுப்பாடுகளால் கதி கலங்கிப்போன மக்கள் இனியும் தாங்கமாட்டார்கள் என்ற அடிப்படையிலேயே தற்போது தளர்வுகள் தாராளமாக வழங்கப்பட்டுள்ளன. இனிமேல் தான் மக்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும்.

வேலைக்காக வெளியே செல்வதை தவிர்க்க முடியாது. அவ்வாறு வெளியே செல்லும்போது, மறக்காமல் முககவசம் அணிய வேண்டும். யாரிடம் பேசினாலும் சற்று இடைவெளியை கடைப்பிடித்து பேச வேண்டும். சிறிய வடிவிலான கிருமிநாசினி திரவ பாட்டிலை கையில் எப்போதும் வைத்திருக்க வேண்டும். பொதுவான ஒரு பொருளை கைகளால் தொட நேரிட்டால் உடனே கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.

வேறு காரணங்களுக்காக வெளியேவர நினைப்பவர்கள், தேவை ஏற்பட்டால் மட்டும் வெளியே வரவும். தேவையில்லாமல் வெளியே சுற்றுவதை தவிர்க்கவும். பணிக்கு சென்று வீடு திரும்புபவர்கள், நன்றாக குளித்த பிறகே மற்ற பணிகளை கவனிக்கவும். உடுத்திய ஆடைகளையும் உடனடியாக துவைத்துவிடவும். இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலம் நாமும் கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதுடன், வீட்டில் உள்ளவர்களையும் பாதுகாத்துக்கொள்ள முடியும். நாம் அனைவரும் உழைப்பதே நமது குடும்பத்திற்காகத்தான். எனவே, இப்போதைய தேவை அதிக கவனத்துடன் செயல்படுவதுதான். அதுதான் நம்மையும், நம் குடும்பத்தையும் நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கும்.

click me!