மகளிர் ஆணையம் பெண்களின் தலைமைப் பண்பை வளர்க்க வேண்டும்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

By SG BalanFirst Published Sep 25, 2024, 1:40 PM IST
Highlights

உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு தலைமைப் பண்பை வளர்த்து, அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில், மாநில மகளிர் ஆணையத்திற்கு முக்கியப் பங்கு உள்ளது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு அளிக்கும் நாரி சக்தி வந்தன் சட்டம் விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் பெண்களிடையே தலைமைப் பண்மை வளர்ப்பதில் புதிய மாநில மகளிர் ஆணையத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது என முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு அளிக்கும் நாரி சக்தி வந்தன் சட்டம் விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றார்.

இந்த முக்கியமான சட்டத்தின் முழுப் பலன்களையும் உத்தரப் பிரதேசப் பெண்கள் பெறுவதை உறுதிசெய்ய, அவர்களிடையே தலைமைத்துவத் திறனை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை முதல்வர் யோகி வலியுறுத்தினார். பெண்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும் அவர்களின் நலனை மேம்படுத்துவதிலும் மகளிர் ஆணையம் முன்னணியில் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார், இந்த நோக்கங்களை அடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு விரிவான திட்டத்தைத் தயாரிக்க ஆணையத்திற்கு அறிவுறுத்தி இருக்கிறார்.

Latest Videos

ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், மாநில மகளிர் ஆணையத்தின் நோக்கங்கள், பொறுப்புகள், உரிமைகள் குறித்து முதல்வர் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.

பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை உறுதி செய்ய மாநில அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு முயற்சிகளை முதல்வர் எடுத்துரைத்தார். பெண்கள் நலனுக்காக சிறப்பு உதவி எண்கள் அமைப்பது உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றார். இந்த முயற்சிகளில் இருந்து நேர்மறையான முடிவுகள் ஏற்கனவே தெரிகின்றன என்றார்.

மாநில மகளிர் ஆணையத்தின் அதிகாரிகள் தங்கள் மாவட்ட பயணங்களின்போது உள்ளூர் பெண்களுடன் உரையாடி இந்தத் திட்டங்களை திறம்பட பெண்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த உரையாடல்களில் இருந்து சேகரிக்கப்பட்ட கருத்துக்கள் முதலமைச்சர் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும். எந்தவொரு நபரும் இந்தத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியாவிட்டால், அதற்கான தீர்வுகளை ஆணையம் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும், சட்டவிரோத பிச்சை எடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் குழந்தைகளை பாதுகாப்பதில் அரசின் உறுதிப்பாட்டை முதல்வர் வலியுறுத்தினார். இக்குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து சமூகத்தின் அனைவரையும் போல வாழ வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார். இந்த முக்கியமான பணியில் மாநில மகளிர் ஆணையம் தீவிர பங்காற்ற வேண்டும். இதுபோல பாதிக்கப்படக்கூடிய பெண்களின் முழுமையான வளர்ச்சி மற்றும் நலனுக்காக பங்களிக்க வேண்டும் என்றும் அவர் முதல்வர் தெரிவித்தார்.

மத்திய அரசுடன் இணைந்து மாற்றுத்திறனாளி பெண்களுக்கான ஆதரவு மையம் விருந்தாவனத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் யோகி மேலும் தெரிவித்தார். இது தவிர வீடற்ற பெண்களுக்கான மையங்கள் பல தற்போது இயங்கி வருகின்றன. அங்கு தேவைப்படுபவர்களுக்கு தங்குமிடங்கள் வழங்கப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த மையங்களில் வசிக்கும் பெண்களில் பலர் படித்தவர்கள், கைவினைப் பொருட்கள் செய்தல் மற்றும் பிற கலைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள். அவர்களின் திறமையை சிறப்பாக பயன்படுத்த, மாநில மகளிர் ஆணையம் இந்த பெண்களை அணுகி அவர்களின் திறனையை வளர்ப்பதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும் எனவும் முதல்வர் கூறினார்.  

மகிளா சம்வாசினி கிரிஹாஸ், அடல் உண்டு உறைவிடப் பள்ளிகள், கஸ்தூரிபா பள்ளிகள், பெண்கள் விடுதிகள் மற்றும் ஆஷ்ரம் அமைப்பு பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை சரிபார்ப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். ஆணையத்தின் அதிகாரிகள் இந்த நிறுவனங்களை மதிப்பீடு செய்து அரசுக்கு பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்றார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர், துறை அதிகாரிகள் மற்றும் மகளிர் ஆணையம் இடையே அதிக ஒருங்கிணைப்பு தேவை என்று முதல்வர் வலியுறுத்தினார். இத்தகைய ஒத்துழைப்பு, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுவதை உறுதி செய்யும் என்றார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதித்த முதல்வர், மாநிலம் முழுவதும் பெண்களின் அவசர உதவிக்காக 1090, 181 மற்றும் 112 உள்ளிட்ட ஹெல்ப்லைன்கள் உள்ளன என்றும் எடுத்துரைத்தார். 1090 ஹெல்ப்லைனில் தொடர்புகொண்டால், புகாரின் சிக்கல்களைப் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்ப ஆலோசனைகள் வழங்கப்படுகிறது என்றார்.

தவிர, சுயஉதவிக் குழுக்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பி.சி. ஆணையம் ஆகியவையும் இந்த முயற்சிகளை தொடரும் என்று முதல்வர் யோகி நம்பிக்கை தெரிவித்தார். மகளிர் ஆணையம் சுமூகமாக செயல்பட தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

click me!