நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ப்ளூவேல் எனப்படும் கொலைகார விளையாட்டு. இந்த விளையாட்டை இணையத்தில் விளையாடி, பலர் இதற்கு அடிமையாகி, உயிரை விட்டுள்ளனர். எனவே, ப்ளூவேல் விளையாட்டுக்கு எதிராக பெரும் விழிப்பு உணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது, அரசும் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. ப்ளூவேல் விளையாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன ரீதியாக மீட்பதற்கு பல ஏற்பாடுகளையும் செய்து வருகிறது அரசு
இந்நிலையில், ப்ளூவேல் போன்ற விளையாட்டுகளை, இணையத்தில் 'பயர்வால்' எனப்படும் தடுப்பு அரண் மூலம் நிரந்தரமாகக் தடுக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பாக உரிய பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ப்ளூவேல் எனப்படும் இந்த இணைய விளையாட்டு, ரஷ்யாவைச் சேர்ந்தவரால் உருவாக்கப்பட்டது. இது உலகம் முழுதும் பெரும் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது. இந்த விளையாட்டை விளையாடத் தொடங்கினால், இதில் படிப்படியாக ஒவ்வொரு கட்டமாக விளையாட்டுக்குள் ஈர்க்கப்பட்டு, கடைசியாக தற்கொலைக்கு துாண்டும் வரை இது முடிந்துவிடும். இது போன்ற இணைய விளையாட்டுகளால், இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
இப்படி பொதுமக்களுக்கு வெளிப்படையாக கணினி, செல்போன்கள் மூலம் எளிதில் கிடைக்கும் ப்ளூவேல் போன்ற விளையாட்டுகளை, பயர்வால் எனப்படும் தடுப்பு அரண் மூலம் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, ப்ளூவேல் விளையாட்டை தடுக்கும் பயர்வால் உருவாக்குவது தொடர்பாக ஒரு நிபுணர் குழுவை அமைக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், ப்ளூவேல் போன்ற விளையாட்டுகள் தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் என்றும் கூறியது.