அமெரிக்கா குடைச்சல் கொடுத்தால் இந்தியா பணியாது: பிரதமர் மோடி அதிரடி

Published : Aug 25, 2025, 09:57 PM IST
Narendra Modi Speech in ahmedabad

சுருக்கம்

அமெரிக்காவின் 50% வரி விதிப்பையும் தாங்கும் வலிமை இந்தியாவுக்கு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சிறு தொழில்முனைவோர், விவசாயிகள் உள்ளிட்டோரின் நலன்களே தனக்கு முக்கியம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் 27 முதல் இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா 50% வரி விதிப்பு அமல்படுத்த உள்ள நிலையில், எவ்வளவு அழுத்தம் வந்தாலும் இந்தியா அதைத் தாங்கி நிற்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

இன்று அகமதாபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "அமெரிக்காவின் பொருளாதார அழுத்தம் எவ்வளவு வந்தாலும், அதைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றலை நாம் தொடர்ந்து அதிகரிப்போம்" என்று கூறினார். "இன்று, தற்சார்பு இந்தியா இயக்கம் குஜராத்திலிருந்து அதிக ஆற்றலைப் பெறுகிறது, இதற்குப் பின்னால் 20 ஆண்டுக்கால கடின உழைப்பு உள்ளது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிறு தொழில்முனைவோருக்கு உறுதி

உலகில் தற்போது பொருளாதார சுயநலத்தின் அடிப்படையில் கொள்கைகள் வகுக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், இத்தகைய பாதுகாப்புவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா உறுதியாக நிற்கும் என்றும், இந்திய மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்றும் தேசத்திற்கு உறுதியளித்தார்.

சிறு கடைக்காரர்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் சிறு தொழில் முனைவோர்களை நோக்கிப் பேசிய மோடி, "காந்தியின் மண்ணிலிருந்து நான் மீண்டும் மீண்டும் உறுதியளிக்கிறேன்: மோடியைப் பொறுத்தவரை, உங்கள் நலன்கள்தான் முதன்மையானது. சிறு தொழில் முனைவோர்கள், கால்நடை வளர்ப்போர் அல்லது விவசாயிகள் என எவரும் எந்தத் துன்பத்தையும் சந்திக்க என் அரசு ஒருபோதும் விடாது" என்று கூறினார்.

டிரம்ப் அரசின் நடவடிக்கை

முன்னதாக, தனது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி, உள்நாட்டு (சுதேசி) தயாரிப்புகளைப் பயன்படுத்த மக்களை வலியுறுத்தி இருந்தார். இது டிரம்ப் அரசுக்கு விடுக்கப்பட்ட ஒரு மறைமுகமான செய்தியாகப் பார்க்கப்பட்டது.

"இந்தியாவின் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தொடர்பான எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தும் கொள்கைக்கு எதிராக மோடி ஒரு சுவரைப் போல நிற்கிறார். நம் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் மீனவர்கள் தொடர்பான எந்த சமரசத்தையும் நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்," என்று பிரதமர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ரஷ்ய எண்ணெயை தொடர்ந்து வாங்கியதற்காக இந்தியாவுக்கு அபராதம் விதிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்கள் மீது கூடுதலாக 25% வரி விதித்தார். இதனால் மொத்த வரி 50% ஆக உயர்ந்தது. இந்த எதிர்பாராத நடவடிக்கை, டெல்லியில் நடைபெறவிருந்த வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை திடீரென ஒத்திவைக்க வழிவகுத்தது. மேலும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து சந்தேகங்களை எழுப்பியது.

அமெரிக்காவின் கடுமையான அழுத்தம் இருந்தபோதிலும், இந்தியா இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்பு (EFTA) மற்றும் ASEAN போன்ற நாடுகளுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியா-ரஷ்யா நட்பு ஒரு துருவ நட்சத்திரம்! புடினை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!
மன்னிப்பு கோரிய இண்டிகோ நிறுவனம்.. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு சிறப்பு வசதிகள் அறிவிப்பு!