
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மாயாவதியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் கட்சி முன் வந்தது. ஆனால், அவர் எங்களுடன் பேச்சுவார்த்தைக்கூட நடத்த முன்வர வில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஆட்சியைப் பிடித்த பாஜக
உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. சமாஜ்வாடி கட்சி 111 இடங்களில் வெற்றி பெற்றது. 2007-ஆம் ஆண்டில் தனித்து ஆட்சியைப் பிடித்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி வெறும் ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்துதான் தேர்தலை சந்திக்க முடிந்தது. இதனால், வாக்குகள் சிதறி பாஜக மீண்டும் சுலபமாக வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சிகள் ஒன்றுக்கொன்று விமர்சித்து வருகின்றன.
மாயாவதியுடன் கூட்டணி
இந்நிலையில் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமையாமல் போனது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய கருத்தைத் தெரிவித்துள்ளார். டெல்லியில் ‘தலித் உண்மைகள்’ என்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் ராகுல் காந்தி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசுகையில், “அரசியல் சாசனம் என்பது ஓர் ஆயுதம் போன்றது. ஆனால், அமைப்புகள் இல்லாமல் அது அர்த்தமற்ற ஒன்றாகி விடும். அந்த அமைப்புகளை எல்லாம் ஆர்.எஸ்.எஸ். கைப்பற்றி வைத்துள்ளது. அண்மையில் நடந்த முடிந்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் கட்சி முன் வந்தது.
கூட்டணிக்கு முன்வராத மாயாவதி
கூட்டணி வைக்க மட்டுமல்ல, மாயாவதியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவும் காங்கிரஸ் கட்சி முன் வந்தது. ஆனால், அவர் எங்களுடன் பேச்சுவார்த்தைக்கூட நடத்த முன்வர வில்லை. ஏனெனில், சி.பி.ஐ., அமலாக்க துறை மற்றும் பெகாசஸ் போன்றவற்றுக்கு மாயாவதி பயந்து விட்டார். இதனால், ஆளும் பா.ஜ.க.வுக்கு வெற்றி பெற தெளிவான பாதை அமைத்து தந்து விட்டார்” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.